சோறு போடும் விவசாயிகளை இப்படியா மத்திய, மாநில அரசுகள் அவமதிப்பது? ராமதாஸ் ஆவேசம்
சோறு போடும் விவசாயிகளை இந்த அளவுக்கு கேவலப்படுத்த யாரும் முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
சென்னை: ஊருக்கே சோறு படைக்கும் விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது சரியல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை மத்திய அரசு சட்டை செய்யாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று நீண்ட நாள்களாக அப்பகுதி மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில் அதற்கும் மதிப்பு கொடுக்காமல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வறட்சியின் தாண்டவம்...
அந்த அறிக்கையில், தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால் பாசனப்பரப்பில் 87% வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் வறட்சி நிவாரணமாக ரூ.40,000 கோடி மதிப்பிடப்பட்டது. ஆனால் அவற்றில் வெறும் ரூ.1,748 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருப்பது சரியல்ல.
எலிக்கறி உணவு
நதி நீர் இணைப்பு, வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 15 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் கவனத்தை இன்றாவது ஈர்க்க மாட்டோமா என்ற ஆசையில் தினந்தோறும் அவர்கள் எலிக்கறி உண்பது, சடலம் போல் இருப்பது, தூக்குக் கயிறு உள்ளிட்ட போராட்டங்களை விவசாயிகள் வைக்கின்றனர்.
நெடுவாசல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 20 நாள்களாக அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மக்களின் அனுமதியின்றி நெடுவாசலில் திட்டம் செயல்படுத்தப்படாது என்று மத்திய இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்தார். ஆனால் அதை மறந்து விட்டு நேற்று ஹைட்ரோ கார்பன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது.
மீனவர்கள் பிரச்சினை
தமிழக எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றது. இதனால் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடக்காத வண்ணம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என்று மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர். அதை நம்பி மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
தமிழகம் வஞ்சிப்பு
இதுபோல் ஒவ்வொரு பிரச்சினைகளிலும் போராட்டம் நடத்தும் மக்களுக்கு பொய்யான உறுதி அளித்து அவர்களின் போராட்டத்துக்கு முடிவு கொண்டு விட்டு பின்னர் நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் மட்டும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டுவது ஏன்?
துரோகம்
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் இந்திய பிரஜைகள் தானே என்ற சந்தேகம் எழும்புகிறது. மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மாநில அரசும் குரல் கொடுக்க மறுக்கிறது. இது மிகப்பெரிய துரோகமாகும். இந்த போக்கை கைவிட்டு, தமிழக விவசாயிகள், மீனவர்கள், நெடுவாசல் மக்கள் ஆகியோரின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.