இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வேண்டும்... ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை ஆகிய பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும். விரட்டியடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

குறிப்பாக ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கச்சத்தீவு பகுதியில் மின் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். மேலும், இதுவரை தமிழக மீனவர்கள் 73 பேரையும், அவர்களுக்கு சொந்தமான 100-க்கு மேற்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.
இது குறித்து ராமேஸ்வரத்தில் இன்று அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. அதில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் விசைப் படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும், மீனவர்களின் பேச்சு வார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 73 பேரையும், அவர்களின் 100-க்கும் மேற்பட்ட படகுகளையும் விடுவிக்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.
இதன் காரணமாக 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications