இந்தி பேசாததால் துப்பாக்கிச் சூடு- இந்திய கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
இந்திய கடற்படையைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனர்.
Recommended Video
ராமேஸ்வரம்: இந்தி பேசாததால் துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையைக் கண்டித்து ஆயிரக்கணக்கான ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை துரத்தியுள்ளனர். அப்போது தமிழில் மீனவர்கள் பேசியுள்ளனர்.
ஆனால் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என கூறியுள்ளனர் கடற்படையினர். அப்போது திடீரென கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
கடற்படை விளக்கம்
இத்துப்பாக்கிச் சூட்டில் ஜான்சன், பிச்சை ஆகிய மீனவர்கள் படுகாயமடைந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடக்கவில்லை என்கிறது கடற்படை.
தலைவர்கள் கண்டனம்
ஆனால் இதனை ஏற்க மறுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இலங்கை ராணுவம்தான் இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஸ்டிரைக் முடிவு
இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் நேற்று மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கடற்படையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.
போராட்டம் வெடிக்கும்
இதனடிப்படையில் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காலைவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 800-க்கும் அதிகமான படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.