காலத்தால் அரிய புத்தகங்களையும் அடித்துச் சென்ற மழை வெள்ளம் - சோகத்தில் சென்னை நூலகர்!
சென்னை: சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் தான் பல ஆண்டுகளாக சேகரித்த 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை இழந்து வேதனை அடைந்துள்ளார் சென்னையைச் சேர்ந்த நூலகர் ஒருவர்.
சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிவரும் ரெங்கய்யா முருகன், தாம்பரத்தில் உள்ள முடிச்சூர் பகுதியில் வசித்துவருகிறார்.
மானுடவியல் தொடர்பாகவும் தமிழகத்தில் அமைந்துள்ள பிராமணர் அல்லாத மடங்கள் தொடர்பாகவும் 2000க்கும் மேற்பட்ட அரிய புத்தகங்களை தரைத்தளத்தில் அமைந்திருக்கும் தன் வீட்டில் சேமித்து வைத்திருந்தார் ரெங்கைய்யா முருகன்.

இந்தியப் பழங்குடி அனுபவங்கள்:
ஏற்கனவே வட இந்தியப் பழங்குடிகளைப் பற்றிய அனுபவங்களின் நிழல் பாதை என்ற புத்தகத்தை எழுதியிருந்த அவர், தன் சேகரிப்பில் உள்ள புத்தகங்களை வைத்து தமிழக மடங்கள் தொடர்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது என்கிறார் ரெங்கய்யா முருகன்.

மேல் பகுதிக்கு மாற்றம்:
டிசம்பர் 2ஆம் தேதி காலையில் தெருவில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓட ஆரம்பித்ததும் தன் வீட்டின் புத்தக அலமாரியில் கீழ் பகுதியில் இருந்த புத்தகங்களை மேல் பகுதிக்கு மாற்றினார். ஆனால், சில மணி நேரங்களிலேயே நீர்மட்டம் இடுப்பளவுக்கு உயரவும் வீட்டை விட்டு வெளியேறினார் அவர்.

ஒட்டிக் கிடந்த புத்தகங்கள்:
வெள்ள நீர் வடிந்த பிறகு வந்து பார்த்தபோது, அவரது பல ஆண்டு சேகரிப்பு தண்ணீரில் ஊறிப்போய் கிடந்தது. பல புத்தகங்களின் பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக்கிடந்தன. தற்போது வேறு யாரிடமும் கிடைக்க வாய்ப்பில்லாத பல புத்தகங்கள் தன் சேகரிப்பில் இருந்ததாகக் கூறுகிறார் அவர்.

ஊறிப் போன புத்தகங்கள்:
டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளம் வடிந்த பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவருடைய அரிய சேகரிப்புகளில் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. எல்லாமே தண்ணீரில் ஊறிப் போயிருந்தன. அவற்றைப்பார்த்து நிலைகுலைந்துபோன அவர், வேறு வழியின்றி அவற்றைத் தூக்கியெறிய முடிவுசெய்தார்.

உதவிய அக்கம்பக்கத்தார்:
நீரில் ஊறிய புத்தகங்களைத் தெருவில் தூக்கியெறிந்துவிட்டபோது, அவற்றை அகற்றவந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், தன் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி சொன்னதாகச் சொல்கிறார் அவர். அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்தவர்களும் புத்தகங்களை காய வைத்துத் தர முன்வந்ததாகவும் கூறுகிறார் முருகன்.

வீட்டில் வைத்திருந்தது தவறு:
ஆனால், பல புத்தகங்களின் பக்கங்கள் ஒன்றோடு ஒன்றாக ஓட்டிப்போன நிலையில், புத்தகங்களைக் காப்பாற்றுவது சாத்தியமில்லை என முடிவு செய்ததாகக் கூறுகிறார் அவர். இவ்வளவு அரிய புத்தகங்களை இத்தனை ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்தது தவறு என தற்போது வருந்துகிறார் ரெங்கய்யா முருகன்.

அறிவுரையைக் கேளுங்கள்:
முன்பே அவற்றை டிஜிட்டல் வடிவில் படியெடுத்திருக்க வேண்டும் எனவும் அரிய புத்தகங்களைச் சேகரிப்பவர்களுக்கு அதுவே தன் அறிவுரை என்றும் கூறுகிறார் ரெங்கய்யா முருகன்.












Click it and Unblock the Notifications