தொடர்ந்து 65 போன் செய்து போலீஸாரை டென்ஷன்படுத்திய வாலிபர் கைது
நாமக்கல்: ராசிபுரத்தில் ஒரு வாலிபர், இரவில் காவல்துறைக்கு தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்து கைதாகியுள்ளார்.
இந்த நபரின் பெயர் மணிகண்டன். ஒரு தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்க்கிறார். இவர் தினசரி அவசர போலீஸ் எண்ணான 100க்கு போன் செய்து பொழுதைப் போக்கி வந்துள்ளார்.
போன் போட வேண்டியது, எதையாவது சொல்ல வேண்டியது என்று டென்ஷன்படுத்தி வந்துள்ளார். அதிலும் செப்டம்பர் 13ம் தேதி இரவு காயின் பாக்ஸ் போன் மூலமும், செல்போன் மூலமும் விடாமல் 65 முறை போன் செய்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையையே கொந்தளிக்க வைத்து விட்டார்.
இனிமேலும் இவரைச் சும்மா விடக் கூடாது என்று முடிவு செய்த போலீஸார் அவரது எண்ணைக் கண்காணித்து நேற்று மடக்கிப் பிடித்து அள்ளி விட்டனர். மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏன் இப்படி போன் செய்து தொல்லை கொடுத்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.