உள்ளாட்சி தேர்தலை எந்த நேரத்திலும் நடத்த தயாராக இருக்கிறோம்...- மாநில தேர்தல் ஆணையர்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் நடத்த தயாராக இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறியுள்ளார்.
திருநெல்வேலி: உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் என்றும் அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், தமிழக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் ஆய்வு முடிந்து விட்டது. இடஒதுக்கீடு தொடர்பாக பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அரசு அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.
இதில் உயர்நீதிமன்றம் தெரிவித்த அறிவுரைப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தோம். அதன்படி உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஆவணங்கள், இறுதி வாக்காளர் பட்டியல், ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்து தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பெரோஸ்கான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications