சூடான் சென்ற சத்யபிரியா ஐ.பி.எஸ். மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட மத்திய அரசு உத்தரவு!
சென்னை: தமிழக அரசின் உரிய ஒப்புதல் இல்லாமல் சூடானுக்கு ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்றச் சென்றதாக கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சத்யபிரியா மீது மேற்கொள்ளப்பட்ட சஸ்பென்ட் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு மாநில அரசின் மூலமாக தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சத்யபிரியா, சூடான் ஐ.நா. அமைதிப் படையில் சேர விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பான ஐ.நா. அமைதிப் படை தேர்வில் 2010-11ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படையில் சேருவதற்கு உள்துறை அமைச்சகம் சத்யபிரியாவுக்கு அழைப்பு அனுப்பியது. இதற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்தது. ஆனால் தமிழக அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை.
இருப்பினும் மத்திய உள்துறை அமைச்சக அழைப்பை ஏற்று சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படையில் பணியாற்ற 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி புறப்பட்டுச் சென்றார் சத்யபிரியா. அவர் அங்கு பணி முடித்த பின்னர் கடந்த மார்ச் மாதம் தமிழகம் திரும்பினார்.
ஆனால் தமிழக அரசோ, உரிய ஒப்புதல் இல்லாமல் வெளிநாடு சென்றதாகக் கூறி சத்யபிரியாவை சஸ்பென்ட் செய்தது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் சத்யபிரியா முறையீடு செய்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உள்துறை அமைச்சகம், கடந்த அக்டோபர் 28-ந் தேதி தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவை அனுப்பி வைத்தது.
அதில், சத்யபிரியா சஸ்பென்ட் செய்யப்பட்டது சரியான நடவடிக்கை அல்ல. அவர் மீதான சஸ்பென்ட் நடவடிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications