புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு இந்திரா நகரில் பிரமாண்ட வெற்றி வாய்ப்பு - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ரங்கசாமிக்கு பிரமாண்ட வெற்றி வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி நியூஸ் 7 - தினமலர் நாளிதழ் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகளை மண்டலவாரியாக வெளியிட்டு வருகின்றது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியான நிலையில், இன்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகின. அதில் புதுச்சேரி மாவட்டம் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் முதல்வருமான ரங்கசாமிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருத்துக் கணிப்பின்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 71.2 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 15.1 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதிமுகவுக்கு 3.8 சதவீத கிடைத்துள்ளது. தேமுதிக - ம.ந.கூட்டணி 1.9 சதவீதத்துடன் 4வது இடத்தில் உள்ளது.
புதுவை மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் அதிமுக தனியாகவும், காங்கிரஸ்-திமுக கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி-தேமுதிக-தமாக கூட்டணி, போட்டியிடுகின்றன. அதே போல் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.