விடுமுறை நாட்களில் தடையின்றி ஏடிஎம்களில் பணம்!- ரிசர்வ் வங்கி
சென்னை: விடுமுறை நாட்களில் ஏடிஎம்களில் தடையின்றி பணம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு வணிக வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பிறகு ஏடிஎம்கள் செயல்பாடு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகிவிட்டதாகச் சொன்னாலும், விடுமுறைக் காலங்களில் இப்போதும் ஏடிஎம்களில் பணமில்லாமல் காத்து வாங்கும் நிலைதான் உள்ளது.
வரும் வாரத்தில் சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்திக்கு செப்டம்பர் 29, அக்டோபர் 2 மற்றும் சனி, ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
பண்டிகைக் காலம் என்பதாலும், சம்பளத் தேதி என்பதாலும் மக்கள் ஏடிஎம்களை அதிகம் நாடும்போது பணத் தட்டுப்பாடு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏ.டி.எம்.,களில் பணம் தட்டுப்பாடின்றி கிடைக்க, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏ.டி.எம்.,ஒன்றில் 2,000, 500, 100 ரூபாய் நோட்டுகள், ரூ 54 லட்சம் வரை வைக்கப்படும். இதன் மூலம் இனி தடையின்றி விடுமுறை நாட்களில் பணம் கிடைக்கும்,'' என்றார்.