ஆட்சியாளர்களின் கைக்கூலிகள்தான் ஐஏஎஸ் அதிகாரிகள்... முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி நறுக்
ஆட்சியாளர்களின் கைகூலிகள்தான் ஐஏஎஸ் அதிகாரிகள் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி கூறியுள்ளார்.
சென்னை: மாநிலத்தை ஆள்பவர்கள் சொல்லக் கூடியதை மட்டுமே செய்யும் கைக்கூலிகள்தான் ஐஏஎஸ் அதிகாரிகள் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு மற்றும் அலுவலகம், அவரது மகன் விவேக் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரியும் தலைமை செயலாளருமான ராம்மோகன் ராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்துவது சரியா என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து கிறிஸ்துதாஸ் காந்தி அளித்த பதில்:
இது ஏதோ புதிதாக இப்போதுதான் நடக்கிறது என்று யாரும் கருதக் கூடாது. நான் நிர்வாகத்தில் இருந்தவன் என்ற அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இதுபோன்று கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் ஆட்சியாளர்களின் கைகூலிகளாக இருக்கின்றனர். அவர்களது சுயநலத்திற்காக செயல்படுபவர்களாக மாறியுள்ளனர்.
இந்த சோதனையை இதோடு நிறுத்தினால் போதாது. பல பேரிடம் வருமானவரிச் சோதனை செய்ய வேண்டிய சூழல் நிர்வாகத்தில் இருக்கிறது. மக்கள் நலத்திற்காக எந்த ஐஏஎஸ் அதிகாரி உழைத்திருக்கிறார். ஒன்றிரண்டு பேரை பார்க்கலாம். அவ்வளவுதான். மக்களுக்காக சேவை செய்யக் கூடிய நிர்வாக அதிகாரம் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு உரிய வேலையைச் செய்யாமல் ஆட்சி செய்பவர்களினுடைய சுயநலத்திற்கு துணை போகிறார்கள். இது துயரமானது. அதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது.
ஐஏஎஸ் அதிகாரிகள் ஆள்பவர்களின் கட்டளையை நிறைவேற்ற மட்டுமே வருகிறார்கள். இந்த செட்அப் அப்படி. அது மாறாத வரை எதுவும் மாறாது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கென்று ஒரு சுதந்திரமும் கிடையாது. ஐஏஎஸ் ஆகிவிட்டால் எல்லாம் செய்துவிடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றும் இங்கு நடைபெற முடியாது என்று கிறிஸ்துதாஸ் காந்தி கூறினார்.
இதோ போன்று மற்றொரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம், தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.