ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி: இன்று முதல் பிரச்சாரத்தில் அனல் பறக்கும்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் 5 முனைப் போட்டியால் களைகட்டியுள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி என்று கூறப்பட்டாலும் பாஜக, நாம்தமிழர் கட்சி, டிடிவி தினகரன் என பிரபலமான வேட்பாளர்களால் 5 முனைப்போட்டியாக மாறியுள்ளது.
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான கட்டத்தை எட்டியது.
145 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டன. 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற 7ஆம் தேதி கடைசி நாளாகும். இதன் பின்னரே குலுக்கல் முறையில் சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கப்படும்.

ஆர்.கே.நகரில் பலமான போட்டி
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் என்.மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக இடையேதான் போட்டி என்றாலும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். பாஜகவின் கரு.நாகராஜனும் களத்தில் இருக்கிறார்.

தினகரன் வேட்புமனு தாக்கல்
டிடிவி தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். தனக்குத் தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டு அண்ணா இல்லாத கருப்பு வெள்ளை சிவப்பு கொடியோடு வந்து அவர் தாக்கல் செய்தார். அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொப்பி கிடைக்குமா?
டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் சுயேட்சை என்பதால் கிரிக்கெட் மட்டை, விசில் சின்னத்தையும் கேட்டுள்ளார்.
தினகரன் கடும் சவாலை ஏற்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது. அவர் கேட்ட தொப்பி சின்னம் கிடைத்தால் அதுவே அவருக்கு சந்தோசமான விசயம். போன தேர்தலுக்கு வாங்கிய தொப்பியை போடலாமே.

விஷால் - தீபா
நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் வேட்புமனு நிராகரிக்கப்படவே அவர் இடைத்தேர்தல் களத்தை விட்டு வெளியேறினார். இதேபோல தீபாவும் களத்தில் இல்லை. அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.

மருதுகணேசுக்கு ஆதரவு
தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.

மதுசூதனன் நம்பிக்கை
அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலையை நம்பி களமிறங்குகிறார். அவருக்கு அதிமுகவிலேயே எதிர்ப்பு இருக்கிறது என்று எதிர்கட்சியினர் கூறினாலும் அனைவரும் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்யவே நினைப்பார்கள்.

பிரச்சாரத்தில் அனல் பறக்கும்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் களைகட்டியுள்ளது. கருணாஸ் உள்ளிட்ட மூவர் அணி இதுவரை யாருக்கு ஆதரவு என்று கூறவில்லை. தினகரனின் களப்பிரச்சாரம் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லைவ. 5 முனைப் போட்டியால் இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications