ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் நியாயமாக நடைபெறாது.. சீமான் பொளேர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் நியாயமாக நடைபெறாது என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் நியாயமாக நடைபெறாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கவியரசு கண்ணதாசனின் 36ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை, தியாகராயநகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழினத்தின் பெருமைமிக்க இலக்கிய அடையாளம், இசையின் வழியே இனிய தமிழை வளர்த்த பெருந்தமிழர் என கவியரசு கண்ணதாசனுக்கு புகழாரம் சூட்டினார்.
மேலும் அவர் பாட்டில் அவர் தாலாட்டில் மயங்காத தமிழன் இருக்கவே முடியாது என்ற அவர் பெருங்கவி கண்ணதாசன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவுநாளில், தமிழ்ப் பிள்ளைகள் நன்றியுணர்வோடு வணக்கம் செலுத்துவது கடமை என்றார்.

கண்ணதாசனுக்கு புகழ்வணக்கம்
அதனால் தான் நாம் தமிழர் பிள்ளைகள் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவைப் போற்றி புகழ் வணக்கம் செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் என்றும் சீமான் கூறினார். ஆர்.கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டால் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.

பலத்தை நிரூபிப்போம்
கடந்தமுறை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார். எங்களது பலம் என்ன என்பதை நிரூபிப்போம் என்றும் சீமான் கூறினார்.

நியாயமாக நடைபெறாது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் நியாயமாக நடைபெறாது. வாக்குக்கு பணம் வாங்குபவர்கள் மீதும் கொடுப்பவர்கள் மீதும் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையம் முன்வருவதில்லை
அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிலவற்றை ஊடகத்தின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தால் வாக்குக்கு பணம் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் அச்சத்தினால் தவறு செய்வதை தவிர்க்க வாய்ப்புள்ளது. ஆனால் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வருவதில்லை; பயப்படுவதற்காகவா இவ்வளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மூடு விழா கொண்டாடுவதே நல்லது
அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு தொடக்கவிழா குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சீமான், அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாடுவதைவிட, மூடு விழா கொண்டாடுவதே நல்லது என்று சாடினார்.டெங்கு குறித்த மத்திய மருத்துவக் குழுவின் ஆய்வு பற்றிய கேள்விக்கு, டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் உயிர் இழப்பு அதிகரித்துள்ளது.

வெறும் கண்துடைப்பு தான்
அரசின் செயல்பாடுகள் மெத்தனமாக உள்ளன. இந்நிலையில் டெங்கு பாதிப்பை மத்திய குழு ஆய்வு செய்தது வெறும் கண்துடைப்பு தான்; அரசு நியமிக்கும் மருத்துவக்குழு, அரசுக்கு எதிராக எப்படி அறிக்கை அளிக்கும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications