ஆர்.கே.நகரில் அபாரம்.. 77% வாக்கு பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்
ஆர்கே நகர் தொகுதியில் 1 மணி நேரத்திலேயே 7.32 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆர்.கே.நகரில் நாள் முடிவில் மொத்தமாக 77% வாக்கு பதிவாகி இருக்கிறது. 5 மணிக்கு முன்பாக வந்த 5000 வாக்காளர்கள் டோக்கன் பெற்று வாக்குப்பதிவு செய்தனர்
ஆர்கே நகர் மக்களின் பிரச்னைகளைக் கேட்க ஒரு பிரதிநிதி இல்லை என்ற குறை கடந்த ஓராண்டாக மக்கள் மத்தியில் இருந்து வந்தது. தங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை, மழைக்காலத்தில் பெரும் சிரமங்களை சந்தித்த போதும் தங்களின் குறைகளை முறையிட ஒரு மக்கள் பிரதிநிதி இல்லை என்ற குறை மக்கள் மத்தியில் இருந்தது.
மக்களின் விரக்தியின் பிரதிபலிப்பா, அல்லது பணம் வாங்கிய விசுவாசத்திற்காக வாக்களிக்கிறார்களா என்று வியக்கும் அளவிற்கு கடும் குளிரிலும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்டு வாக்காளர்கள் வாக்களித்தனர். வயதானோர், பெண்கள், மற்றும் கைக்குழந்தையுடன் தாய்மார்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினரும் காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்டு வாக்களித்து வந்தனர்.
ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
காலை நிலவரப்படி ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. எனினும் பிற்பகலுக்குப் பிறகு வாக்குப்பதிவானது மந்தமடையத் தொடங்கியது. இந்நிலையில் மாலை 4 மணி நிலவரப்படி 65% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வரிசையில் நின்றவர்கள் வாக்களித்தனர்
மாலை 5 மணிக்குள் வாக்குச் சாவடி வந்து வரிசையில் நிற்போர் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது தேர்தல் ஆணைய விதி. கடைசி நேரத்தில் அதிக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஐந்து மணி நிலவரம்
மொத்தமுள்ள 258 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முடிந்த சாவடிகளில் இருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்தும் சீலிடப்பட்டு கொண்டு செல்லப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்ததால் மாலை ஐந்து மணி வரை 74.5% வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆர்.கே நகரில் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க மக்கள் காத்திருந்தனர். 84 வாக்குச்சவாடிகளில் மக்கள் வரிசையாக காத்து இருந்தனர். வாக்குச்சவாடிகளில் பெண்களே அதிகமாக வாக்களிக்க நின்றனர்.
இறுதி நிலவரம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணிக்கு முன்பாக வந்த 5000 வாக்காளர்கள் டோக்கன் பெற்று வாக்குப்பதிவு செய்தனர். ஆர்.கே.நகரில் நாள் முடிவில் 77% வாக்கு பதிவாகி இருக்கிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை சீலிடும் பணி நடைபெற்று வருகிறது.