சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துகள் வாடிக்கையாகிவிட்டது: விஜயகாந்த்
சென்னை: கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்தும், கன்டெய்னர் லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
கிருஷ்ணகிரி அருகே தனியார் பேருந்து, கன்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் உயிர் இழந்துள்ளனர், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்வதுடன், காயமுற்றவர்கள் குடும்பத்திற்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்து, அவர்கள் வெகுவிரைவில் குணம் அடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். சமீப காலமாக தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.
விபத்திற்குள்ளானதில் இன்னும் பலபேர் அடையாளம் காண முடியாத அளவிற்கு மிக மோசமான விபத்தாக நடந்திருக்கிறது என்பதை கேட்கும் போது மிகவும் வேதனையாகவுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவியும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய சிகிச்சையும், உதவித்தொகையும் வழங்க வேண்டும். ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே மேலுமலை பகுதியில் ஜூன் முதல் வாரத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரிக்கும் ஓசூருக்கும் இடையே உள்ள ஒரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உயர்ந்தவாறு செல்கிறது. இந்த இடத்தில் உயரமான தடுப்புச்சுவர்களும், மின்விளக்கும் அமைக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர். தமிழக அரசு மக்களின் கோரிக்கையை ஏற்று,
உடனடியாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்து, இனிமேலும் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் நடக்கா வண்ணம் கவனமுடன் செயல்பட வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.