குண்டும் குழியுமான சாலை - சாலையில் வாழை நட்டு நூதன போராட்டம்
நாகர்கோவில் அருகே குண்டும் குழியுமான சாலையில் நிரம்பியுள்ள தண்ணீரை இறைத்து வாழைக்கன்றை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள்.
நாகர்கோவில்: குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் வாழை கன்றை நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அருகே அருமனை பகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் சார்பில் வாழை நடும் போராட்டம் நடந்தது. குழித்துறை நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட குழித்துறை - ஆலஞ்சோலை சாலை, உத்திரங்கோடு - மஞ்சாலுமூடு சாலை உள்ளிட்ட பல சாலைகள் மிக மோசமாக பழுதடைந்துள்ளது.

இந்த சாலைகளை செப்பனிடக் கோரி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பழுதான சாலைகளை சீரமைக்ககோரி மார்க்சிஸ்ட் சார்பில் விளக்க கூட்டமும், வாழைநடும் போராட்டமும், ரோட்டில் தேங்கியுள்ள தண்ணீரை இறைக்கும் போராட்டமும் உத்திரங்கோட்டில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமை வகித்தார். முழுக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் மரியசெல்வி விலாசினி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பேபி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ராஜூ, மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சசிகுமார், ஜெயகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நூதன போராட்டம் பொது மக்களை வெகுவாக கவர்ந்தது.












Click it and Unblock the Notifications