நெல்லை டூ சென்னை சென்ற 1000 கோடி பழைய ரூபாய்
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரயில் மூலம் பாதுகாப்பாக சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பழைய நோட்டுக்களை வங்கியில் செலுத்தி மாற்றி கொள்ள காலக்கெடுவும் வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பண மதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான பிரச்சனைகளும், மக்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்திலும் ஏராளமானோர் வங்கி, தபால் அலுவலகங்களில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்தனர். இவ்வாறு பெறப்பட்ட சுமார் 1000 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி அனுமதிக்காக அந்தந்த மாவட்டத்திலுள்ள மண்டல வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி பழைய ரூபாய் நோட்டுக்களை அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று அவை அந்தந்த வங்கிகளில் இருந்து எடுத்து வரப்பட்டு நெல்லை ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பிரத்யேக ரயில் பெட்டியில் ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதன்பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அந்த சிறப்பு பெட்டி இணைக்கப்பட்டது. இந்த பெட்டியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டபடியே சென்றது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் நெல்லை மாநகர ஆயுதப்படை உதவி போலீஸ் கமிஷனர் வடிவேல், இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் 13 போலீசார் அந்த பெட்டியில் சென்றனர். போலீஸ் பாதுகாப்புடன் பணம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்பட்டன .












Click it and Unblock the Notifications