கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதியின் வீட்டு கழிவு நீர் தொட்டியில் கிழிந்த ரூபாய் நோட்டுகள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் வீட்டு கழிவு நீர் தொட்டியில் கிழிந்த நிலையில் ரூ.2000 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் வீட்டு கழிவு நீர் தொட்டியில் கிழிந்த நிலையில் ரூ.2000 நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேராசிரியர் நியமனத்துக்கு துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டதாக சுரேஷ் என்பவர் கதடந்த 2 தினங்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அதிகாரிகள் துணை வேந்தர் கணபதியை கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை சுரேஷிடம் இருந்து கணபதி ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் மீதம் 29 லட்சம் ரூபாய் காசோலையையும் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதையடுத்து அங்குள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை கணபதியை கைது செய்தனர்.
பணத்தை பெற உதவி செய்த பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கணபதியின் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் பணம் ஏதும் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் துப்புரவு பணியாளர்களை கொண்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்நிலையில் அந்த தொட்டியிலிருந்து ரூ. 2000 நோட்டுகள் கிழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கணபதியிடம் 8 மணிநேரமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் ஓராண்டில் ஓய்வு பெறவுள்ள கணபதியால், கடந்த 2 ஆண்டுகளாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications