தொடங்கியது எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப விநியோகம்... ஆன்லைனிலும் பெறலாம்
சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இன்றி வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பம் பெற விரும்புவோர், www.tnhealth.org என்ற முகவரியில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு கடைசி நாளான ஜூன் 7-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதன்பின்னர், கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படும். முதல் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது.
முதல் கட்டக் கலந்தாய்வில் காலியிடங்கள் ஏற்படும் பட்சத்தில் ஜூலை 18-ம் தேதி இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.