ரயில் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை.. எர்ணாகுளத்தில் போலீசார் ஆய்வு
சென்னை: சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் சுமார் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிபிஐடி போலீஸார் கடந்த 4 நாட்களாக கேரளாவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 8-ந் தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட ரயிலில் பொருத்தப்பட்டிருந்த மூன்று சரக்கு பெட்டிகளில் சுமார் ரூ.342 கோடி கொண்டு செல்லப்பட்டது. ரயில் சென்னை வந்தடைந்த பின்னர் தான் ரயில் பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனிறும் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம் ஆன நிலையில் கொள்ளையர்கள் குறித்து துப்பு துலங்கவில்லை.
இதனிடையே சிபிசிஐடி அதிகாரிகள், எழும்பூர் ரயில் நிலையத்தைச் சுற்றி கடை வைத்திருக்கும் வியாபாரிகள், உணவகங்களில் உள்ள ஊழியர்கள் ஆகியோரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளைச் சம்பவம் நடப்பதற்கு முன்பும், கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற நாளிலும் அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் மர்ம நபர்களின் நடமாட்டம் இருந்ததா என போலீஸார் விசாரணை செய்தனர்.
முன்னதாக, கொள்ளைச் சம்பம் நிகழ்ந்த ரயில் பெட்டியானது பராமரிப்பு பணிகளுக்காக எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலைய யார்டில் 2 நாட்கள் இருந்தது. எனவே, இந்த கொள்ளை வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி போலீஸார் கேரளாவில் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலைய யார்டுக்கு சென்ற சிபிசிஐடி போலீஸார் அங்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்து வெளியே சென்ற தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.