துணி துவைப்பது... டாய்லெட் கழுவுவது... உப்பில்லாத சாப்பாடு... ஈஷாவின் 'சேவா' தண்டனை
சென்னை: ஈஷாவில் உள்ளவர்களின் துணிகளை தினமும் துவைக்க வேண்டும். எல்லோருக்கும் சாப்பாடு பறிமாறிவிட்டுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும். நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு, புளிப்பு, காரம் என்று எதுவும் இருக்காது என்று புதிய புகார் ஒன்றை கூறியுள்ளனர் ஈஷா யோகா மையத்தில் இருந்து தப்பி வந்த சிறுவர்கள்.
கோவை வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் திருமணமாகாத இரு மகள்கள் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது நிர்வாகி ஒருவர், 'அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகவும், அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லையென்றும்' கூறினார்.
ஈஷா யோகா மையம்
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார்.
மூளைச்சலவை
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், ஈஷா யோகா மையத்தில் ஏராளமானவர்களுக்கு மூளைச்சலவை செய்து பிரம்மசரியம் மேற்கொள்ள வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு பிரம்மச்சரியம்
மேலும் ஈஷா சம்கிருதி பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தியோ, மூளைச்சலவை செய்தோ பிரம்மசரியம் ஏற்க வைப்பதில்லை என யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.
மதுரை சிறுவர்கள்
மதுரையில் உள்ள போலீஸ் ஏட்டு மகேந்திரனுக்கு இரண்டு மகன்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவரையும் கோவையிலுள்ள ஈஷா மைய பள்ளியில் படிப்பதற்காக சேர்த்துவிட்டார். அங்கே அந்த குழந்தைகளுக்கு படிப்பைவிடவும், பிரம்மச் சரியத்தையே போதித்துள்ளனர்.
மனநிலை பாதிப்பு
இதனால் அந்த குழந்தைகளுக்கு உணவு கட்டுப்பாடு, வேலைப்பளு இருந்ததால் அந்த குழந்தைகள் பித்துப்பிடித்து போன மனநிலையில் உள்ளனர். அந்த குழந்தைகளுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டும் கொடுத்துள்ளார்கள் ஈஷா மையத்தினர். இதனால் அக்குழந்தைகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் பாதிப்பு
நல்லபடியாக படிக்க வேண்டும் அனுப்பிவைக்கப்படும் குழந்தைகளை இப்படி சித்திரவதை செய்து பிரம்மச்சரியத்தை போதிக்கிறது ஈஷா மையம் என்பதை உணர்ந்த மகேந்திரன், தன் இரு குழந்தைகளையும் மதுரைக்கே அழைத்து வந்துவிட்டார்.
சிறுவர்கள் கண்ணீர்
பாதிக்கப்பட்ட தன் இரு குழந்தைகளையும் அழைத்துச்சென்று இன்று கோவை மாவட்ட ஆட்சியர் முன் வாக்குமூலம் அளித்து, ஈஷா மையத்தின் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவிருக்கிறார் மகேந்திரன். பின்னர் ஹேம்ந்தும், சமயோகித்தும் தங்களுக்கு ஏற்பட்ட செய்தியாளர்களிடம் கண்ணீருடன் கூறினர்.
சேவா தண்டனை
அங்கே எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. பிரம்மச்சரியம் போதிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள். இதனால் துடிப்புடன், குறும்புத்தனங்களுடன் இருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு 'சேவா' எனும் பெயரில் தண்டனை கொடுப்பார்கள்.
சாணம் அள்ளுவது
அதாவது, மாட்டுத்தொழுவத்தில் தினமும் சாணம் அள்ளச்சொன்னார்கள். 100க்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. அந்த தென்னை மரங்களில் ஒவ்வொன்றுக்கும் 10 லிட்டம் தண்ணீர் ஊற்றவேண்டும். தினமும் நாங்கள் செய்வோம்.
துணி துவைப்பது
ஈஷாவில் 300க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களுக்கு தினமும் துணிகளை துவைக்க வேண்டும். எல்லோருக்கும் சாப்பாடு பறிமாறிவிட்டுத்தான் நாங்கள் சாப்பிட வேண்டும். நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு, புளிப்பு, காரம் என்று எதுவும் இருக்காது. விளையாட்டில் கூட நாங்கள் விளையாடக்கூடாது விளையாடுபவர்களுக்கு பந்து பொறிக்கி போடவேண்டும்.
சிறுவர்கள் கண்ணீர்
தினமும் காலையிலும் மாலையிலும் 500 தோப்புக்கரணம் போடவேண்டும்'' என்று ஈஷாவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் கூறியுள்ளனர் அந்த சிறுவர்கள்.
மர்ம மரணம்
ஈஷா யோகா மையத்தில் சுவாமி ஏகாக்ரா உள்ளிட்ட பலர் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கின்றனர். அவை மூடி மறைக்கப்படுவதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சுவாமி ஏகாக்ரா மனநிலை சரியில்லாமல் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர்களை யோகா மையத்தினர் சொல்ல வைத்தனர். மனநலம் சரியில்லாத ஒருவருக்கு எப்படி பிரம்மசரியம் ஏற்க முடியும்?" என்று கேட்கிறார் ஒருங்கிணைப்பாளர் செந்தில்.
இதற்கு ஈஷா மையத்தின் பதில் என்ன?