சர்ச்சைக்குரிய சந்தையூர் தீண்டாமை தடுப்புச் சுவர்... இடிக்கும் பணிகள் தொடக்கம்!
மதுரை மாவட்டம் சந்தையூரில் இரு பிரிவினர் பிரச்னைக்கு காரணமான சந்தையூர் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
Recommended Video
மதுரை : மதுரை மாவட்டம் சந்தையூரில் இரு பிரிவினரின் பிரச்னைக்குக் காரணமான சந்தையூர் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு வருகிறது. கோட்டாட்சியர் தலைமையில் சுவரின் 2 மீட்டர் அளக்கப்பட்டு இடிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் இரு பிரிவு இன மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு பிரிவினர் தங்களின் கோவிலைச் சுற்றி தடுப்புச் சுவர் ஒன்றை கட்டிஎழுப்பியுள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சாதிக் கொடுமைக்கு வித்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தி மற்றொரு பிரிவு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அரசு வழங்கிய பொது நிலத்தில் ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து தடுப்புச் சுவர் கட்டிக்கொண்டு தங்களை வரவிடாமல் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்றைய தினம் இரு பிரிவு மக்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஆட்சியர் வீரராகவராவ் பொதுமக்கள் பயன்படுத்தும் அங்கன்வாடிக்கு செல்லும் பாதையை மறித்து இந்த தடுப்புச் சுவரானது கட்டப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இது கட்டப்பட்டுள்ளதால் நிச்சயமாக ஒரு பிரிவினர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது.
எனவே தீண்டாமை தடுப்புச் சுவரின் 2 மீட்டர் சுவரை இடிக்க உத்தரவிடுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இன்று காலை முதல் கோட்டாட்சியர் சுகன்யா தலைமையில் தடுப்புச் சுவரின் ஒரு பகுதியை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மாவட்ட ஆட்சியரின் இந்த முடிவுக்கு சுமார் 2 மாதங்களாக போராடி வந்த மற்றொரு பிரிவு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.