சாரலே இல்லாதபோதும், நாளை தொடங்குகிறது குற்றால சாரல் திருவிழா!
நெல்லை: தென்னகத்தின் ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் குற்றாலத்தில் 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது.
இயற்கை அளித்த அற்புதமான சுற்றுலாத்தலம் குற்றாலம் ஆகும். இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை மணம் நிறைந்த அருவிக்குளியல் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த சுற்றுலாத்தலம் குற்றாலம்.
குற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.
இந்தாண்டு சாரல் திருவிழா 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட்3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழா நடைபெறும் 8 நாளும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் 27ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சந்திப் நந்தூரி தலைமை தாங்குகி்றார்.சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் கலந்து கொண்டு சாரல் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா சுற்றுலாத் துறை ஆணையர் பழனிக்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இரண்டாம் நாளான 28ஆம் தேதி சுற்றுச் சூழல் பூங்காவில் தோட்டக்கலை கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் ராஜலெட்சுமி,வெல்லமண்டி நடராஜன்,கடம்பூர் ராஜீ கலந்துகொள்கின்றனர்.பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு மாலையில் பரிசுகள் வழங்கப்படும்.
3ஆம் நாள் விழாவில், யோகா,வில்வித்தை மினிமராத்தான்.போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 4ஆம் நாள் விழாவில்படகுபோட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
5ஆம் நாள் விழாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த ஓவியப் போட்டி நடைபெறுகிறது. 6ஆம் நாள் விழாவில் கொழு கொழு குழந்தைகள் போட்டியும், கோலப்போட்டியும் 7ஆம் நாள் நாய்கண்காட்சியும் நடைபெறுகிறது.
8ஆது நாளான ஆக.3ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது.இதில் அமைச்சர்கள் ராஜ லட்சுமி ,கடம்பூர் ராஜீ ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.இந்தாண்டு ஆணழகன் போட்டி நடத்தப்படவில்லை.மேலும் அவசர அவசரமாக சாரலே இல்லாத குற்றாலத்தில் சாரல்திருவிழா நடத்தப்படுவது ஒருபக்கம் இருந்தாலும் விழா அழைப்பிதழ்கள் இன்னும் யாருக்கும் வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.