பொதுமக்களுக்கு முதல்வரின் புத்தாண்டுப் பரிசு ‘பால் கொள்முதல் விலை உயர்வு’: சரத்குமார்
சென்னை: பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையிலும், அதேசமயம் நுகர்வோர் பாதிக்கப் படாதவாறும் பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 வீதம் உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

சுமார் 22½ லட்சம் பால் உற்பத்தியாளர்கள் இந்த கொள்முதல் விலை உயர்வால் மொத்தத்தில் ஓர் ஆண்டிற்கு சுமார் 274 கோடி ரூபாய் அளவிற்கு பயனடையும் வாய்ப்பை முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கித் தந்திருக்கிறார்.
இந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு பால் விலை உயர்த்தப்படமாட்டாது என்று அறிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த அறிவிப்பு வரும் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக பால் உற்பத்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வயிற்றில் பால் வார்ப்பதாக உள்ளது என்ற வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications