இந்திக்கு மட்டும் சமூக வலைத்தளங்களில் முன்னுரிமை- மத்திய அரசின் உத்தரவுக்கு சரத்குமார் கண்டனம்
சென்னை: இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மற்ற மொழி பேசும் மக்களும் வாழும் நாட்டில் இந்தி மொழிக்கு மட்டும் அதிக முன்னுரிமை தருவது ஏன் என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவருமான ஆர்.சரத்குமார்.
மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததையடுத்து அனைத்து அமைச்சகங்களிலும் இந்தியின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சில அரசு உத்தரவுகள் கூட இந்தியிலேயே வழங்கப் பட்டது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை தரவேண்டும் என சமீபத்தில் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசு இந்தி மொழியை திணிக்க முற்படுவதாகவும், இந்தி பேசாதவர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசு இந்திக்கு மட்டும் அதிக முன்னுரிமை தருவது ஏன் என அவர் கேட்டுள்ளார்.
மேலும், அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிர்ச்சி...
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தலங்களை பயன்படுத்தும் போது மத்திய அரசின் அதிகாரிகள், அலுவலர்கள், வங்கிகள், வங்கி அதிகாரிகள் இந்தி மொழிக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இந்திக்கு இணையான மொழிகள்...
இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கைக்கு இணையாக மற்ற மொழி பேசும் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவரவர்கள் தேவைக்கு, தொழில் ரீதியாக, கல்வி ரீதியாக எந்த ஒரு மொழியையும் தேர்ந்தெடுத்து படிப்பதை, அறிந்து கொள்வதை எவரும் தடுக்கமுடியாது.

தவறான உத்தரவு...
அவ்வாறு இருக்கையில் புதிய மத்திய அரசு ‘‘இந்திக்கு சமூக வலைத்தளங்களில் முன்னுரிமை'' அளிக்க வேண்டும் என்று உத்தரவிடுவது மாபெரும் தவறு.

வேண்டுகோள்...
பிரதமர் சொன்னது போல நாம் ஒன்றாகச் செயல்பட்டால் தான் நம் திட்டங்கள் வெற்றிபெறும் என்பது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் இதுபோன்ற ஒரு மொழிக்கு, ஒரு இனத்திற்கு முன்னுரிமை என்ற திட்டங்களை மத்திய அரசு முழுமையாக விட்டொழிக்கவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications