ச.ம.க தொண்டர்கள் மது, சிகரெட் குடிக்க கூடாது... சரத்குமார் அன்புக்கட்டளை
திருப்பூர்: சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகைப்பிடிக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது. இளைஞர்களுக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடையை பூட்டுவதற்கு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடையில் மதுவை வாங்காமல் புறக்கணித்தால் அந்த கடை தானாக மூடப்படும். என்று நடிகரும் அக்கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிவுரை வழங்கி உள்ளார்.
திருப்பூர் தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உடுமலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர், சமத்துவ மக்கள் கட்சியின் 9 ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் தொடர் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து பொதுக் கூட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன் என்றார்.

மதுவிலக்கு
தமிழகத்தில் உடனே மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதற்காக நானோ, முதல்வரோ ஜெயலலிதாவோ மதுவுக்கு ஆதரவானவர்கள் என்று அர்த்தமில்லை. மதுவிலக்கை படிப்படியாகத்தான் அமல்படுத்த முடியும்.

குடிக்காதீர்கள்
சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் யாரும் புகைப்பிடிக்கவோ, மதுகுடிக்கவோ கூடாது. இளைஞர்களுக்கு நாம் முன் உதாரணமாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடையை பூட்டுவதற்கு போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, டாஸ்மாக் கடையில் மதுவை வாங்காமல் புறக்கணித்தால் அந்த கடை தானாக மூடப்படும். எனவே உங்கள் கிராமத்தில் இதற்கு ஊர்க்கட்டுப்பாடு விதிக்க ஏற்பாடு செய்யுங்கள்.

கருத்துக்கணிப்பு பொய்
தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு தவறான ஒரு கருத்துக்கணிப்பாகும். மக்கள் மனதில் தவறான தகவலை திணிப்பதற்காக தி.மு.க. இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. கருத்துக்கணிப்பு என்றால் 234 தொகுதிகளில் எடுக்க வேண்டும். ஆனால் 80 தொகுதிகளில் 3 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளனர்.

யார் முதல்வர்
முதல்வர் ஜெயலலிதாவுக்கு உள்ள ஆதரவு சதவீதத்தைவிட மற்றவர்களின் கூட்டு சதவீதம் அதிகமாக வருவது போல் தெரிவித்துள்ளனர். அந்த கூட்டணியில் 9 பேர், தானே அடுத்த முதல்வர் என்று கூறி வருகிறார்கள்.

6 வது முறை முதல்வர்
எதிர்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து யார் முதல்வர் என்று முடிவு செய்து கூட்டணி அமைப்பதற்குள், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தலில் வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வராகிவிடுவார் என்று கூறி கூட்டத்தை முடித்தார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications