ஜெயலலிதா மீது நம்பிக்கை இழந்த சரோஜாதேவி?
சென்னை: ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்திய பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகை சரோஜா தேவி, ரசிகர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும், அவரது இல்லத்தை சோலையாக்கலாம் என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கி தற்போது தமிழகத்தை ஆண்டுகொண்டுள்ள கட்சியின் மீது சரோஜாதேவிக்கு நம்பிக்கை போய்விட்டதா என்ற ஐயம் உருவாகியுள்ளது.
மக்கள் திலகம் என்று போன்றப்பட்ட மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக தற்போது, தமிழகத்தை ஆளும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். வீட்டை புனரமைக்க எந்த நடவடிக்கையும் அந்தக் கட்சி சார்பில் எடுக்கப்படவில்லை என்பது எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலை அகலப்படுத்த எம்.ஜி.ஆர். வீட்டின் சுற்றுச்சுவர் ஒருபக்கம் இடிக்கப்பட்டதால், வெள்ளம் எம்.ஜி.ஆரின் வீட்டிற்குள் பாய்ந்தோடியது என்று அவரின் உறவினர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பத்திரிகை ஒன்றிடம் தொலைபேசியில் பேசிய முன்னாள் நடிகை சரோஜாதேவி கூறியுள்ளதாவது:
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், எம்.ஜி.ஆர். வீடு பாதிக்கப்பட்டிருப்பதையும், அவர் பயன்படுத்திய பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் அறிந்து அழுகையாக வந்தது. மனிதராக பிறந்து தெய்வமாக மாறியவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் வீட்டில் உட்கார்ந்து நான் சாப்பிட்டு இருக்கிறேன். எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம். இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார்.
சரோஜா தேவி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். பல வருடங்கள் முன்பு, ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது, சரோஜாதேவியும் அவரும் மிகுந்த நெருக்கமான தோழிகளாகவே இருந்தனர்.
ஆயினும், முதல்வராக உள்ள ஜெயலலிதா மீது நம்பிக்கை வைக்காமல் எம்ஜிஆர் ரசிகர்களிடம் தர்மம் பெற்றுதான் அவரது வீட்டை புனரமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை சரோஜாதேவி பேட்டி உணர்த்துகிறது. ஜெயலலிதா மீது சரோஜாதேவிக்கு நம்பிக்கை போய்விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது அவரது பேட்டி.












Click it and Unblock the Notifications