ஸ்டாலினை சந்திக்க தூது விட்ட திவாகரன்... கடுமையாக எதிர்க்கும் திமுக நிர்வாகிகள்
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்திக்க சசிகலா தம்பி திவாகர்ன தூது அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்திக்க தூது அனுப்பியிருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன். ஆனால் சசிகலா குடும்பத்தை யாரை சந்தித்தாலும் கெட்ட பெயர்தான் கிடைக்கும் என திமுக மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம்.
சட்டசபையில் ஸ்டாலினை பார்த்து சிரித்தார் ஓபிஎஸ் என நள்ளிரவில் செய்தியாளர்களிடம் விகார முகத்தை வெளிப்படுத்தினார் சசிகலா. அதற்காகவே ஓபிஎஸ் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது எனவும் சசிகலா விளக்கம் அளித்திருந்தார்.
ஸ்டாலினுக்கு திவாகரன் ஆதரவு
ஆனால் காலம் மாற சசிகலா குடும்பம் இப்போது ஸ்டாலினுக்கு நேசக்கரம் நீட்டுகிறது. சசிகலாவின் தம்பி திவாகரன் பகிரங்கமாகவே ஸ்டாலினை பாராட்டி வருகிறார். திமுகவின் போராட்டங்களுக்கு துணை நிற்போம் என கூறி வருகிறார்.
தினகரன் - ஸ்டாலின் கூட்டணி ஆட்சி?
இன்னொருபக்கம் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியோ, ஸ்டாலினும் தினகரனும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என தொடர்ந்து கூறி வருகிறார். தினகரனுடன் முதல்வர் எடப்பாடியார் இணக்கமாக போகாவிட்டால் நிச்சயம் ஸ்டாலின் - தினகரன் ஆட்சி அமையும் எனவும் சு.சுவாமி ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
ஸ்டாலினை சந்திக்க தூது
இந்நிலையில் ஸ்டாலினை நேரில் சந்திக்க தூது அனுப்பியிருக்கிறாராம் திவாகரன். ஆனால் திவாகரன் உட்பட சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த எவருடனும் நெருக்கம் காட்டி ஆட்சியை கலைத்தால் தேவையில்லாத கெட்ட பெயர் திமுகவுக்குதான் வரும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தடுத்து வருகிறார்களாம்.
எதிர்க்கும் திமுக நிர்வாகிகள்
சசிகலா குடும்பம் என்றாலே மக்கள் வெறுக்கிறார்கள்.. ஆகையால் அந்த குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் ஸ்டாலின் சந்தித்து பேசினால் நிச்சயம் கெட்ட பெயர்தான் ஏற்படும் என்பது அந்த தலைவர்களின் வாதம். இருப்பினும் ஸ்டாலின் - திவாகரன் இடையே விரைவில் ரகசிய சந்திப்பு நடைபெறக் கூடும் என்றே கூறப்படுகிறது.