அதிமுகவை விட்டு வெளியேறுகிறது சசி கோஷ்டி! தனி கட்சி தொடங்க ஆலோசனை!
டெல்லி நெருக்கடியால் சிறைவாசங்களைத் தவிர்க்க அதிமுகவை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கிவிடலாம் என தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம் சசிகலா கோஷ்டி.
சென்னை: டெல்லி நெருக்கடியைத் தொடர்ந்து அதிமுகவை விட்டு வெளியேறி தனி கட்சி தொடங்கிவிடலாமா என்பது குறித்து சசிகலா கோஷ்டி ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை கபளீகரம் செய்தது சசி கோஷ்டி. சசிகலா முதல்வராகவும் ஆசைப்பட்டார். ஆனால் கிடைத்தது சிறை தண்டனைதான்.

தினகரனுக்கு திஹார்
அதேபோல் சசிகலாவின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட டிடிவி தினகரனும் ஆர்கே நகர் இடைத் தேர்தல் மூலமாக முதல்வராகிவிடலாம் என கணக்குப் போட்டார். ஆனால் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறைதான் அவருக்கு கிடைத்து.

டெல்லி விருப்பம்
டெல்லியைப் பொறுத்தவரையில் சசிகலா கோஷ்டி யாருமே இல்லாத அதிமுக என்கிற ஒன்றையே விரும்புவது தெள்ளத் தெளிவான ஒன்று. சசிகலா, தினகரனைத் தொடர்ந்து இளவரசி மகன் விவேக் அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு காப்பு ரெடியாக இருக்கிறது.

தனி கட்சி
இதனால் அதிமுகவை விட்டு ஒரேயடியாக விலகி சொத்துகளைப் பாதுகாக்க தனி கட்சி ஒன்றை தொடங்கிவிடலாமே என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம் சசிகலா கோஷ்டி. அப்படி தனி கட்சி தொடங்கும் நிலையில் தங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது; டெல்டா மாவட்டங்களில் நம்மால் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க முடியும் என்பதும் சசி கோஷ்டி கணக்கு.

நடராஜன் யோசனை
இந்த யோசனையை முன்வைத்ததே சசிகலாவின் கணவர் நடராசன்தானாம். தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் ஆளுக்கு ஒரு திசையில் நின்று அடித்து கொள்வதைத் தவிர்க்கவும் தனிக்கட்சி தொடங்கலாம் என நினைக்கிறதாம் சசி அண்ட்கோ. அப்போதும் தங்களுக்கு சில கட்சிகள், இயக்கங்கள் ஆதரிக்கும் என்பதுதான் சசி கோஷ்டியின் ப்ளானாம்.












Click it and Unblock the Notifications