வருமான வரி ரெய்டால் லாபம் தான்..."ஆல் இஸ் வெல்" மூடில் சசிகலா குடும்பம்!
வருமான வரி சோதனையால் மத்திய அரசின் மீதே அதிருப்தி திரும்பியிருப்பதால் இது தங்களுக்கு சாதகமான விஷயம் தான் என்று சசிகலா குடும்பத்தினர் குஷி மூடில் தான் இருக்கிறார்களாம்.
Recommended Video
சென்னை : தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையால் அரசியல் கட்சிகள் அனைத்தும் இது மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லத் தொடங்கியுள்ளதால் ஒரு பக்கம் ரெய்டால் பரபரப்பு ஏற்பட்டாலும், சசிகலா குடும்பத்தினர் ஆல் இஸ் வெல் மூடிலேயே இருப்பதாக தெரிகிறது.
தமிழகம் முழுவதும் இன்று வடகிழக்குப் பருவமழை இல்லாவிட்டாலும் சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைத்து சோதனையிடும் வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு மழை நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் ரெய்டில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு, கல்லூரி, மருமகன் மறைந்த மகாதேவன் வீடு, அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக், மகள் இளவரசி என்று சசிகலாவிற்கு நெருக்கமானவர்கள் பலரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இதே போன்று சசிகலாவின் கணவர் நடராஜன், டாக்டர் சிவகுமார் மற்றும் சசிகலாவிற்கு நெருக்கமான தொழிலதிபர்கள், கட்சிப் பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினரின் லென்ஸ் பார்வை நீண்டுள்ளது. இந்நிலையில் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்த சசிகலாவின் குடும்ப உறவுகளுக்கு எத்தனை இடங்களில் பங்களா, பண்ணை வீடு மற்றும் சொகுசு வீடுகள் இருக்கிறது என்பதை இந்த வருமான வரி சோதனை அம்பலப்படுத்தியுள்ளது.
எப்படி இவ்வளவு சொத்து?
மேலும் இவர்களின் சொத்து விவரங்களை சரிபார்க்கவே சுமார் 11 பேர் கொண்ட குழுவினரால் ஆயிரத்து 900 அதிகாரிகள் இறக்கிவிட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இருக்கும் சொத்தின் மதிப்பு எவ்வளவு. இவையெல்லாம் இவர்கள் எப்படி சேர்த்தார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படுவோமா நாங்கள் என்று அசால்ட்டாக இருக்கிறார்கள் சசிகலா குடும்பத்தினர்.
கூலாக இருக்கும் தினகரன்
சென்னை அடையாறில் இருக்கும் டிடிவி தினகரன் வீட்டிற்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி திரும்பி சென்றுவிட்டதாக தினகரன் கூறினார். இதே போன்று ரெய்டு நடந்தாலும் பரவாயில்லை, இதனால் எதுவும் நடக்கப் போவதில்லை. மிஞ்சிப் போனால் 20 வருஷம் ஜெயிலில் போடுவார்கள் ஆனால் ஜெயிலில் இருந்து வந்து மீண்டும் பழிவாங்குவேன் என்று கூலாக சொல்கிறார் தினகரன்.
உபசரித்த விவேக் மனைவி
இதே போன்று மீடியாக்கள் அனைத்தும் ரெய்டு செய்தியை பிரேக்கிங் போட்டுக் கொண்டிருக்க ஹாயாக தனது மனைவி, மகளுடன் வீட்டு வாசலில் கோ பூஜை செய்துவிட்டு கூலாக இருந்தார் தினகரன். இதே போன்று சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் மனைவியும் சோதனைக்காக வந்த அதிகாரிகளுக்கு டீ போட்டுக் கொடுத்து உபசரித்திருக்கிறாராம். இதுக்கெல்லாம் அசந்தால் இவ்வளவு சொத்து சேர்க்க முடியுமா என்பது இவர்களுக்குத் தான் பொருத்தும் போல.
அரசியல் கட்சிகளின் கரிசனம்
வருமான வரி சோதனை நடப்பது, தங்களுக்கு சாதகமானது என்றே சசிகலா குடும்பத்தினர் கருதுகின்றனர். ஏனெனில் இருக்கவே இருக்கிறது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறும் சோதனை என்ற பழக்கப்பட்ட குற்றச்சாட்டு. தமிழக அரசியல் கட்சிகளும் அதற்கேற்ப பாஜக திட்டமிட்டு சசிகலா குடும்பத்தினரை அடிபணிய வைக்க வருமான வரி சோதனை நடத்துவதாக சொல்லத் தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் மீதே கவனம்
மேலும் ஒரே நேரத்தில் இத்தனை இடங்களில் சோதனை நடத்துகிறதே என்று மக்களின் பார்வை முழுவதும் மத்திய அரசை சுட்டிக்காட்டுவதால் மக்களின் கரிசனப் பார்வை கிடைத்திருக்கிறது என்றும் குஷியாக இருக்கின்றனர். மேலும் காலை முதல் நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை எந்த இடத்திலும் எந்த ஆவணமும் சிக்கியதாக தெரியவில்லை.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இதனால் வருமான வரி சோதனையின் போது எந்த ஆவணங்களும் சிக்காவிட்டால் இதையே பயன்படுத்தி மக்கள் ஆதரவைப் பெறலாம் என்பது சசிகலா குடும்பத்தினர் கணக்காக இருக்கிறது. எனவே என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே என்று ஆல் இஸ் வெல் மூடிலேயே சசிகலா குடும்பத்தினர் இருப்பதாக தெரிகிறது.