தனிக்கட்சி 'நோ'- அதிமுக (அம்மா) அணியே இருக்கட்டும்... தினகரனுக்கு நெருக்கடி தந்த சசிகலா குடும்பம்
தனிக்கட்சி தொடங்கவே கூடாது என தினகரனுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததாம் சசிகலா குடும்பம்.
சென்னை: எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்கக் கூடாது என தினகரனுக்கு சசிகலா குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால்தான் அதிமுக(அம்மா) அணி என்ற பெயரிலேயே இயங்க முடிவு செய்தாராம் தினகரன்.
அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரிலேயே இயங்குவதற்கு நீதிமன்றத்தின் துணை நாடியிருக்கிறார் டி.டி.வி.தினகரன். அ.தி.மு.கவை வளைப்பதற்கு முன்னோட்டமாக ஜெயா டி.வியும் நமது எம்.ஜி.ஆரும் தன்பக்கம் இருக்க வேண்டும் என நினைக்கிறார் தினகரன். இன்னும் ஒரு மாதத்தில் இந்த இரண்டு நிறுவனங்களும் அவர் பக்கம் வந்து சேர இருக்கிறது.
இளவரசி குடும்பத்தைக் கழட்டிவிடும் பணியில் மன்னார்குடி கோஷ்டிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன' என்கின்றனர் சசிகலா வகையறாக்கள். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசினார் தினகரன். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை.
அம்மா அணியே நீடிக்கும்
அதேநேரம், தனிக்கட்சி முடிவில் இருந்து விலகி அம்மா அணி என்ற பெயரில் இயங்குவது என்ற முடிவை தினகரன் எடுத்திருக்கிறார். இதற்குக் காரணம் குடும்ப கோஷ்டிகளின் கறார் உத்தரவுதான். முப்பது வருட காலமாக நாம் எதற்காகக் காத்திருந்தோமோ அந்த நோக்கத்தில் இருந்து விலகிச் சென்றால், கார்டன் மீதான நமது பிடிமானம் தளர்ந்துவிடும். கார்டனை விட்டு விரட்டும்போதுகூட சின்னம்மா காத்த பொறுமையும் வீண் போய்விடும். அரசியல்ரீதியான முடிவுகளை தீர்க்கமாக ஆலோசித்த பிறகே அறிவிக்க வேண்டும்' எனக் கூறிவிட்டனர். அதேநேரம், தினகரன் மீதான சசிகலாவின் கோபமும் குறையவில்லை என்கிறார்கள்.
தினகரனுக்கு எதிராக தினகரன்
கணக்கு வழக்குகளை விவேக்கை நம்பி ஒப்படைத்திருந்தார் சசிகலா. அவர் தினகரனுக்கு எதிராகச் செயல்படுவதை ஆதாரத்துடன் சிறைக்கு அனுப்பி வைத்தார் தினகரன். இந்த ஆதாரங்களைக் கொண்டு சென்ற தூதுவர்களிடம் சசிகலா எந்த வார்த்தையும் பேசவில்லை. சசிகலா குடும்பத்திலேயே அ.தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டையை வைத்திருப்பது இளவரசி குடும்பத்தினர் மட்டும்தான். சசிகலாவிடம்கூட அ.தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டை இருக்கிறதா என்பது சந்தேகம்தான். சசிகலாவுக்கு எதிராக விவேக்கை வளர்த்துவிடுவதற்கு ஆளும்கட்சி தரப்பில் சிலர் தயாராக இருக்கிறார்.
தினகரன் கடும் அதிருப்தி
அம்மாவின் வார்ப்பு நீங்கள் மட்டும்தான் என சிலர் அவரை உசுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வருமான வரி ரெய்டின் போது கார்டன் முன்பு அவர் அளித்த பேட்டியைப் பார்த்த தினகரனும், அந்தச் சின்னப் பையனுக்கு அரசியல் ஆசை முளைவிட்டுடுச்சு போல எனப் பேசியிருக்கிறார். தொடர்ந்து அமைச்சர்களில் சிலர், விவேக்கிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இளவரசி குடும்பத்தை வைத்தே தினகரனை ஓரம்கட்டும் வேலைகள் நடந்து வருவதை சசிகலாவும் அறிவார்.
விவேக்குக்கு தினகரன் எதிர்ப்பு
அதனால்தான், ஒற்றுமையாக இருந்தால்தான் நமக்கு வாழ்வு எனப் பலமுறை அறிவுறுத்திவிட்டார். ஆனால், தினகரனோ, கணக்கு வழக்குகளில் இருந்து அந்தப் பையனை ஓரம்கட்டினால்தான் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். துரோகிகளுடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படுவதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? அந்தப் பையனோடு இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை' என உறுதியாகக் கூறிவிட்டார். மேலும், இன்னும் ஒரே மாதத்தில் ஜெயா டி.வி நம் கைக்கு வரும் எனவும் பேசிக் கொண்டிருக்கிறார் தினகரன். இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம் சசிகலா.