அய்யோ....எங்களுக்காக அழுது புரள 'அந்த இருவர்' மட்டும்தானா... விரக்தியில் சசிகலா
அதிமுகவில் தங்களை ஒதுக்கி வைக்கும் முடிவுக்கு எதிராக ஒருவர் கூட கூப்பாடு போடவில்லை என்பதில் சசிகலா ரொம்பவே விரக்தியில் இருக்கிறாராம்.
சென்னை: அதிமுகவில் இருந்து தங்களை ஒதுக்குவதாக அறிவித்தபோது இருவர் மட்டும்தான் ஆதரவு குரல் எழுப்பியிருப்பது பெங்களூரு சிறைவாசி சசிகலாவை கொந்தளிக்க வைத்துள்ளதாம்.
சசிகலா சிறைக்கு போனதுதான் தாமதம்.. அதுவரை சின்னம்மா என கூவியவர்கள் எல்லாம் அவரைப் பற்றி எதுவுமே கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா சிறைக்குப் போனபோது கூப்பாடு போட்ட கூத்துகள் அரங்கேறும் என எதிர்பார்த்திருக்கிறார் சசிகலா.
சசி பெயர் இருட்டடிப்பு
ஆனால் சொந்த அக்கா மகன் தினகரன் கூட ஆர்கே நகர் தேர்தலில் சசிகலா பெயரை உச்சரிக்காமல், அவரது படத்தை பயன்படுத்தாமல் பிரசாரம் செய்த போது விரக்தியின் உச்சத்துக்கு போனார் சசிகலா. அதற்கு பிறகு தினகரனை அதிமுகவை விட்டு ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி கோஷ்டி அறிவித்தது சசிகலா எதிர்பார்க்காத ஒன்று.
அந்த இருவர்...
அப்போதும் கூட தங்கள் குடும்பத்துக்காக ஒருவர் கூட குரல் எழுப்பாமல் அமைதி காத்தது சசிகலாவால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தபோதும் நாஞ்சில் சம்பத்தும் கர்நாடகா புகழேந்தியும் மட்டுமே தொடர்ந்து சசிகலா, தினகரனுக்காக குய்யோ முறையோ என குமுறி குமுறி பேசி வருகின்றனர்.
விரக்தியில் சசிகலா
தங்களால் பதவி பெற்றவர்கள் எல்லாம் தப்பி ஓடிவிட இந்த இருவர் மட்டுமே கதறி அழுகிறார்கள் என்ற தகவல் சசிகலாவை ஒருபுறம் நெகிழ வைத்ததாம். அதேநேரத்தில் இவ்வளவு செய்தும் அந்த இருவரைத் தவிர ஒருவர் கூட நமக்காக பேசவில்லையே... என்கிற விரக்தியும் சசிகலாவிடம் இருக்கிறதாம்.
தனிக்கட்சிக்கு ஓகே
இதை தம்மை சந்தித்த வழக்கறிஞரிடம் சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார் சசிகலா. இதனால்தான் இந்த அதிமுகவே வேண்டாம்; தனிக்கட்சியே தொடங்கலாம் என்ற கணவர் நடராசன் முடிவுக்கு சசிகலாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.