அ.தி.மு.க. துணை பொதுச்செயலராகிறார் சசிகலா?
சென்னை: அ.தி.மு.க. பொதுக்குழுவிலேயே நம்பர் 2-வாக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போது இம்மாத இறுதிக்குள் சசிகலா அதிமுக துணைப் பொதுச்செயலராகிவிடுவார் என்கிறது அதிமுக வட்டாரங்கள்.
அதிமுகவில் நிரந்தர பொதுச்செயலராக ஜெயலலிதாவே நீடித்து வருகிறார். மற்ற கட்சிகளைப் போல அதிமுகவில் நம்பர் 2 இடம் யாருக்கும் கிடையாது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல நேரிட்ட போது அடுத்த முதல்வர் யாராக இருக்கலாம் என சசிகலாவின் உறவினர்கள் உட்பட பலரது பெயர்களும் அடிபட்டன. ஓய்வுபெற்ற பின்னரும் அரசு பதவியில் ஆலோசகராக ஒட்டிக் கொண்டிருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் பெயரும் கூட அடிபட்டது.
ஆனால் மீண்டும் ஓ. பன்னீர்செல்வம்தான் முதல்வரானார். இந்த நிலையில் அதிமுகவை தொடர்ந்து தமது பிடியில் வைத்துக் கொள்ளும் வகையில் சசிகலாவுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு கொடுக்கப் போகிறார் ஜெயலலிதா என கூறப்பட்டு வந்தது.
ஆனால் வழக்கமாக பொதுக்குழுவில் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் சசிகலா இம்முறை ஆப்சென்ட் ஆகிப் போனார். இதனிடையேதான் சசிகலாவுக்கு இந்த மாத இறுதிக்குள் துணைப் பொதுச்செயலர் பதவி கிடைக்கப் போகிறது என்கிற தகவல் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் மன்னார்குடி வகையறாவில் தினகரனுக்கு மீண்டும் ஏறுமுகம் கிடைத்துவிட்டது...அவர்தான் கட்சியின் துணைப் பொதுச்செயலராகப் போகிறார் என்கிற தகவலும் பறந்து கொண்டிருக்கிறது.
மன்னார்குடி குடும்பத்துக்கு தொடர்புடைய எல்லோருமே 'கார்டனில்' செல்வாக்கு பெற்றவர்கள்தான் என்பதால் துணைப் பொதுச் செயலர் பதவியை வெல்லப் போவது சசிகலா? தினகரனா? என்கிற பட்டிமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர்!