தினகரனுக்கு சிறையில் இருந்து வாழ்த்து சொன்ன சசிகலா- பெங்களூரு உடனே வர தடை!
ஆர்கே நகரில் வென்ற தினகரனுக்கு சிறையில் இருந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சசிகலா.
சென்னை: ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு சிறையில் இருந்து 'சோர்ஸ்'கள் மூலம் வாழ்த்து சொல்லியிருக்கிறார் சசிகலா. அத்துடன் பெங்களூரு சிறைக்கு தம்மை பார்க்க வருவதற்கு அவசரம் காட்ட வேண்டாம் எனவும் சசிகலா உத்தரவிட்டுள்ளாராம்.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதில் மன்னார்குடி குடும்பம் ஆளுக்கொரு திசையாக பொரணி பேசிக் கொண்டுதான் இருக்கிறது. திவாகரன் குடும்பம், தினகரனை வாழ்த்துகிறது.
இளவரசி குடும்பமோ பொறாமையில் வெந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றிலும் தினகரன் முன்னிலையில் இருப்பதை சிறை அதிகாரி மூலமாக அறிந்து மகிழ்ந்துள்ளார் சசிகலா. வெற்றி சான்றிதழ் பெற்றதும் இரவு தங்களிடம் பேசுகிறேன் சித்தி என சசிகலாவுக்கு தகவல் அனுப்பினார் தினகரன்.
தேர்தல்.அதிகாரியிடமிருந்து சான்றிதழ் பெற்றுக்கொண்டதும் அடையாறு இல்லம் திரும்பிய தினகரன், வாழ்த்து சொல்ல வந்தவர்களை சந்தித்துவிட்டு சிறையிலுள்ள தங்களது சோர்ஸ் மூலம் சசிகலாவை தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது, மகிழ்ச்சியுடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சசிகலா.
மேலும், உங்களை நேரில் சந்திக்க இந்த வாரத்தில் வருகிறேனே என தினகரன் சொல்ல, அவசரப்பட்டு பெங்களுர் வரவேண்டாம். எப்போது வரவேண்டும் என தகவல் அனுப்புகிறேன். அப்போது வா என சொல்லியிருக்கிறாராம் சசிகலா. 'சின்னம்மா' மகிழ்ச்சியே எங்களுக்கு போதும் என இத்தகவலை சொல்லி சொல்லி புளகாங்கிதம் அடைகிறது தினகரன் குரூப்.