சதிகலாவாக மாறிய சசிகலா... கபடநாடகமாடுகிறார்- ஓபிஎஸ் ஆவேசம்
செயற்கையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் சில தகவல்களை வெளியிடுவேன் என்று சசிகலாவிற்கு ஒ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சசிகலா கபட நாடகம் ஆடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி குடும்ப சொத்தாக மாற்றுவதற்கு சசிகலா கபடநாடகம் ஆடுவதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். என்மீது செயற்கையான குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் சில முக்கிய தகவல்களை வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சசிகலாவிற்கு எதிராக களமிறங்கியுள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு முக்கிய நிர்வாகிகள் ஆதரவளித்து வருகின்றனர்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதையடுத்து மதுசூதனன், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
மதுசூதனனுக்கு வரவேற்பு
தனக்கு ஆதரவு தெரிவித்த மதுசூதனனுக்கு ஓபிஎஸ் நன்றி தெரிவித்தார். தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவரையும் கைகூப்பி வரவேற்பதாக ஓ.பி.எஸ். கூறினார்.
கழகத்தின் நிரந்தர அவைத்தலைவர் மதுசூதனன் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கூறினார்.
நான் துரோகியா
நான் துரோகம் செய்து விட்டதாகவும், கபடநாடகம் போடுவதாகவும் கூறுகிறார் சசிகலா. யார் துரோகம் செய்தது, யார் கபடநாடகம் போடுகிறார்கள் என்று மக்களுக்கும், கோடான கோடி தொண்டர்களுக்கும் தெரியும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
கபடநாடகம்
ஜெயலலிதாவிற்கு உதவி செய்ய மட்டுமே சசிகலா சதி செய்ததால் அவரை போயஸ்கார்டனை விட்டு துரத்தினார். மீண்டும் மன்னிப்பு கடிதம் கொடுத்து உள்ளே வந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற கபடநாடகம் போடுகிறார்.
சசிகலாவிற்கு எச்சரிக்கை
குடும்ப சொத்தாக மாற்ற நினைக்கிறார். அமைச்சர்கள் தூண்டி விடுகிறார். ஜெயலலிதாவிற்கு அவர் துரோகம் செய்துவிட்டு எங்களை துரோகி என்று கூறுகிளார்.
சதி வேலை செய்யும் சசிகலா எங்களைப் பற்றி செயற்கையாக குற்றச்சாட்டுகளை சொன்னால் சில உண்மைகளை வெளியிட நேரிடும் என்று ஒபிஎஸ் எச்சரித்தார்.
அறப்போராட்டம்
எம்ஜிஆர்க்கு பக்க பலமாக இருந்தவர் மதுசூதனன். மேலும் அதிமுக பொதுச்செயலாளராக மதுசூதனனை பரிந்துரைத்தேன் எனத் தெரிவித்தார். உண்மைகளை தெரிவிக்கவே இந்த அறப்போராட்டம் மேற்கொண்டுள்ளதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.