கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்த சசிகலா புஷ்பாவின் எம்.பி., பதவிக்கு ஆப்பு வைக்க முடிவு?
சென்னை: அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பாவை, பதவி விலக வைப்பது குறித்து, அ.தி.மு.க., தலைமை, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்ததாலேயே சசிகலா புஷ்பாவின், கட்சிப் பதவி, கடந்த, 7ம் தேதி திடீரென பறிக்கப்பட்டது. அத்துடன், ராஜ்யசபா கொறடா பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதோடு, எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதமும் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
துாத்துக்குடி மாவட்டம், அடையல் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா புஷ்பா, 2011 சட்டசபை தேர்தலின் போது, ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பின், அந்தத் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.
அதற்கு பலனாக, உள்ளாட்சி தேர்தலில், துாத்துக்குடி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார்.
2014ல், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், மேயர் பதவியை ராஜினாமா செய்தார். எம்.பி.,யானதும், அ.தி.மு.க., மகளிர் அணி செயலர் பதவி, ராஜ்யசபா அ.தி.மு.க., கொறடா பதவியும் வழங்கப்பட்டது.
அரசியலில் ஏறுமுகமாகவே இருந்த சசிகலா புஷ்பாவின், கட்சிப் பதவி, கடந்த, 7ம் தேதி திடீரென பறிக்கப்பட்டது. அத்துடன், ராஜ்யசபா கொறடா பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதோடு, எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதமும் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாது மணல் விற்பனையில் பிரபலமானவராக இருக்கும் நபருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த நபரோடு, சசிகலா புஷ்பா நட்பு பாராட்டியதே கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கடந்த 5ம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். அவரை சந்தித்த சசிகலா புஷ்பா, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுபற்றிய தகவல், உளவுத்துறை மூலம் கட்சித் தலைமைக்கு கிடைத்துள்ளது. இதன் பின்னரே, அவரின் பதவிகள் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.