நாத்தனார் மரணத்திற்கு கூட சசிகலா தஞ்சாவூர் போகாதது ஏன்...?
சென்னை: சசிகலா புஷ்பா வீசிய குண்டு காரணமாகவே தனது நாத்தனார் வனரோஜாவின் மறைவுக்கு கூட அஞ்சலி செலுத்த கூட தஞ்சாவூர் போகாமல் இருந்து விட்டார் சசிகலா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரி வனரோஜா, செவ்வாய்கிழமையன்று இரவு உடல்நிலைக்குறைவால் தஞ்சாவூரில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலா தஞ்சாவூர் போகிறார் என்ற செய்தி பரவியது.

இந்தத் தகவல் தெரிந்ததும், சசிகலாவின் உறவினர்கள் சிலர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். நாத்தனார் இறந்துபோனதற்கு போகாமல் இருக்கக்கூடாது என்று மருத்துவமனையில் இருந்த டாக்டர் சிவக்குமார் சொல்லியிருக்கிறார்கள்.
அதற்கு சசிகலா நீண்டநேரம் யோசித்துவிட்டு, இப்போ இருக்கும் சூழ்நிலையில நான் அங்கே போனா அது சரியாக இருக்காது. அதுவும் என்னைப் பற்றித்தான் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல, அங்கே நான் போனால் அவரோட பேச வேண்டியிருக்கும். அது இன்னும் சர்ச்சைகளை உண்டாக்கிடும். அதனால நான் போகலை என்று சொன்னாராம்.
சொல்றவங்க ஆயிரம் சொல்லிட்டுப் போகட்டும். உங்களைப்பற்றி அம்மாவுக்குத் தெரியும். அதனால நீங்க போயிட்டு வாங்க என்று டாக்டர். சிவகுமார் சொல்லியிருக்கிறார். ஆனால் யார் சொல்லியும் சசிகலா சமாதானம் ஆகவில்லை.
செவ்வாய்கிழமை இரவு நீண்டநேரம் பேசியும், சசிகலா தஞ்சாவூர் போகவில்லை என்று முடிவாகியிருக்கிறது. அதன்பிறகுதான் சசிகலா சார்பில், இளவரசியின் மகன் விவேக் போவது என்று முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூருக்கு சசிகலா கிளம்புவார் என்று ஊடகத்தினர் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் அவர் வெளியே வரவேயில்லை.
காலையில் காரில் கிளம்பி, தஞ்சாவூர் போனார் விவேக். இறந்துபோன வனரோஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய விவேக், அதன்பிறகு நடராஜன் அருகே போயிருக்கிறார். நடராஜன் கைகளைப் பற்றிய விவேக் அவரிடம் ஏதோ பேசியிருக்கிறார். அப்போது, அங்கிருந்த ஊடகத்தினரை போட்டோ எடுக்கக் கூடாது என்று சொல்லி வெளியே அனுப்பிவிட்டனர். அதன்பிறகு, நீண்டநேரம் விவேக்கும் நடராஜனும் பேசினார்களாம்.
அத்தை வரலையா? என்று நடராஜன் கேட்க, அதற்கு விவேக், இப்போ சூழ்நிலை சரியில்லை. சசிகலா புஷ்பா கொடுத்த பேட்டியில அத்தை பற்றித்தான் புகார் சொல்லியிருக்காங்க. இப்போ, இங்கே அத்தை வந்து உங்களோடு பேசினால், அது வேறமாதிரி பரவிடும். அப்புறம் அடுத்த முதல்வர் நீங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனாலதான் அத்தை வரலை என்று சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு முதல்வரின் உடல்நிலை பற்றி விசாரித்திருக்கிறார் நடராஜன். நான் அங்கே வந்தாலும் அது உங்க அத்தைக்குத்தான் சிக்கலாகும். அதனாலதான் நான் வரலை. நான் கேட்டதாகச் சொல்லு என்று விவேக்கிடம் சொன்னாராம் நடராஜன்.
வனரோஜா உடலை அடக்கம் செய்யும்வரை நடராஜனின் கூடவே இருந்துவிட்டுத்தான் கிளம்பியிருக்கிறார் விவேக். எல்லாம் முடிந்த உடன் அங்கே நடந்தவற்றை அத்தையிடம் கூறியிருக்கிறார் விவேக்.
விவேக் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கடந்த ஆகஸ்ட் மாதம் தஞ்சாவூர் போனார் சசிகலா. ஆனாலும் நடராஜனுடன் அவர் பேசவில்லையாம். இப்போது சசிகலா புஷ்பா போட்ட குண்டு நாத்தனார் மரணத்திற்குக் கூட சசிகலாவை போக முடியாமல் செய்து விட்டது என்பதுதான் சோகம்.












Click it and Unblock the Notifications