ஓபிஎஸ் ஆதரவு எம்பி. லட்சுமணனை விழுப்புரம் மா. செ. பதவியில் இருந்து நீக்கினார் சசிகலா
அதிமுகவின் எம்பி லட்சுமணன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு என்று தகவல் வெளியானதால் சகிகலா அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி லட்சுமணனை அதிமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா நீக்கியுள்ளார்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு, மூத்த அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று 4 எம்பிகள் நேற்றும் 5 எம்பிகள் இன்றும் ஓபிஎஸ் வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும் ராஜ்ய சபா எம்பியாகவும் இருந்த வந்த லட்சுமணன், இன்று ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவிக்கப் போகிறார் என்ற தகவல் சசிகலாவிற்கு கிடைத்தது. இதனையடுத்து, அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்துள்ளார்.
மேலும், எம்பி லட்சுமணனுக்கு பதிலாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் சி.வி சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சசிகலா அறிவித்துள்ளார்.