உரிய விதிப்படியே பொதுச்செயலராக தேர்வு- தேர்தல் ஆணையத்தில் சசி வக்கீல் பதில்!
அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் இன்று பதிலளித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் பதவி தொடர்பான நோட்டீஸுக்கு சசிகலா தரப்பில் இன்று தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில் உரிய விதிகளின்படியே தாம் பொதுச்செயலராகி இருப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா முதலில் புகார் தெரிவித்தார்.
அதிமுக சட்டவிதி
அதிமுகவின் சட்டவிதிகளின் படி 5 ஆண்டுகாலம் ஒருவர் உறுப்பினராக இருந்தால்தான் கட்சிப் பதவிகளில் உட்கார முடியும் என்பது சசிகலா புஷ்பா தரப்பின் வாதம். இதனிடையே முதல்வர் பதவியையும் சசிகலா கைப்பற்ற முயற்சித்ததால் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது.
ஓபிஎஸ் அணி புகார்
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர், கட்சி விதிப்படி இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்கவே முடியாது; பொதுச்செயலர் என்பவர் பொதுக்குழு மற்றும் அதிமுக தொண்டர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே கட்சி விதி என தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தனர். இந்த புகார் மனுவின் அடிப்படையில் சசிகலா விளக்கம் தர கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
பெங்களூரு சிறைக்கு நோட்டீஸ்
இந்த நோட்டீஸ் பெங்களூரு சிறைக்கே அனுப்பி வைக்கப்பட்டது. சசிகலா பதிலளிப்பதற்கு இன்றுதான் கடைசி நாள்.
எல்லாம் விதிப்படிதான்
இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் இன்று சசிகலாவின் பதிலை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். அதில், உரிய விதிகளின்படிதான் தாம் பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டதாக சசிகலா விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.