சசிகலாவுக்கு ப்ளெக்ஸ் பேனர் வைத்த விருதுநகர் அதிமுக நிர்வாகி- கல்தா கொடுத்த ஜெ.
சென்னை: "கண்களுக்கு இமை செய்யும் பணியை போல் அம்மாவுக்கு நீண்ட ஆயுளோடு பணி செய்யும் சின்னம்மாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து" என சசிகலாவை புகழ்ந்து ப்ளெக்ஸ் போர்டு வைத்த கணேசனை கட்சியை விட்டே கல்தா கொடுத்துவிட்டார் ஜெயலலிதா.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே இரு தினங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியும் தோழியுமான சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை வைத்தவர் விருதுநகர் நகர அதிமுக மாணவர் அணி செயலாளர் பி.கணேசன்.
கணேசன் வைத்த அந்த ஃப்ளெக்ஸ் தூக்கப்பட்டதோடு அவரையும் கட்சியில் இருந்து தூக்கிவிட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் சசிகலாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, ஃப்ளெக்ஸ் போர்டு வைத்து வந்தார். சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்றிய நேரத்தில் மட்டும் ஃப்ளெக்ஸ் மிஸ்ஸிங். சமீபத்தில்தான் விருதுநகர் அ.தி.மு.க மாணவர் அணி செயலாளர் பதவி கணேசனுக்குக் கிடைத்தது. அந்த உற்சாகத்தில் ஃப்ளெக்ஸ் வைத்தார்.
இந்த பேனர் வைக்கப்பட்ட சில மணிநேரங்களில் அதை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலம் கார்டனுக்கு அனுப்பிவைத்துவிட்டார்களால். இதையடுத்து அதிமுக மேலிட உத்தரவுப்படி உளவுத்துறை போலீசார் நேற்று காலை அவசர அவசரமாக அந்த பேனரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதோடு அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக முதல்வர் ஜெயலலிதா நேற்று பிற்பகல் அறிவித்து கணேசனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
அதிமுகவின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டுள்ளதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்த கொண்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.கணேசன் (விருதுநகர் நகர மாணவர் அணி செயலாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
விருதுநகர் பி.கணேசன், இதுபோன்ற வித்தியாசமான பேனர்களை அவ்வப்போது வைத்து அதிமுக கட்சியின் மேலிட தலைவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வந்துள்ளார். அதேபோன்று தற்போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா பேனரை வைத்தால் நமக்கு கட்சியில் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், அதுவே கட்சியில் இருந்து நீக்குவதற்கு காரணமாக அமைந்து விட்டது