தினகரனுக்கு கடைசி வாய்ப்பு... ஆர்.கே.நகர் அக்னி பரீட்சையில் தோற்றால் அடுத்த தளபதி ‘திவாகரன்’
ஆர்.கே.நகர் அக்னி பரீட்சையில் கணிசமான வாக்குகளை வாங்கி செல்வாக்கை நிரூபிக்காவிட்டால் தினகரன் இடத்தில் இனி திவாகரன்தான் என முடிவு செய்துள்ளாராம் சசிகலா.
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கி செல்வாக்கை நிரூபிக்காவிட்டால் தினகரன் இடத்தில் இனி திவாகரன்தான் என முடிவு செய்துள்ளாராம் சசிகலா.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்த இருக்கிறார் தினகரன். தேர்தல் முடிவில் பெரும்பாலான அ.தி.மு.க நிர்வாகிகள் நம் பக்கம் வந்துவிடுவார்கள். விரைவில் இரட்டை இலையும் நம் பக்கம் வரும் என நம்பிக்கையோடு இருக்கிறது தினகரன் அணி.
அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளே தொடர்ந்து ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று வந்துள்ளன. வேறு எந்தக் கட்சியும் பரிசோதனை அடிப்படையில்கூட இந்த இரண்டு கட்சிகளைத் தாண்டி வாக்குகளைப் பெற்றதில்லை.
விஷாலுக்கு செக்
ஆகையால் மதுசூதனனும் மருது கணேஷும் நேரடி போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு எதிராகக் களமிறங்கிய விஷாலில் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
கண்டுகொள்ளாத டெல்லி
இதனால் தினகரன் தரப்பினர் மிகுந்த வேதனையில் இருப்பதாகச் சொல்கின்றனர் சசிகலா உறவினர்கள். இதுதொடர்பாக பேசும் அவர்கள், ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியால் எந்தப் பலனும் இல்லை என்பதை சுட்டிக் காட்ட பலவகைகளில் முயற்சி செய்து வருகிறார் தினகரன். இந்தக் கோஷ்டியை வைத்துக் கொண்டு உங்களால் எதுவும் செய்ய முடியாது' என மத்திய அரசின் பிரதிநிதிகளிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.
டெல்லி உதாசீனம்
ஆனாலும், மத்திய அரசு பாராமுகம் காட்டிக் கொண்டிருக்கிறது. இரட்டை இலை விவகாரத்தில் தீர்ப்பு வருவதற்கு முன்பே, டெல்லியில் சரண்டர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காலில் விழாத குறையாக, எங்களிடம் என்ன கோபம் என்பதைச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வதைக் கேட்பதற்கு தயாராக இருக்கிறோம். இரட்டை இலையை மட்டும் அவர்களுக்குக் கொடுத்துவிடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டனர்.
கடைசி வரை கெஞ்சல்
இதற்குப் பதில் கொடுத்த டெல்லி முக்கியப் பிரமுகர் ஒருவர், உங்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை. இரட்டை இலை உங்களுக்குத்தான்' எனக் கடைசி வரையில் கூறிக் கொண்டிருந்தார். நிலைமை கை மீறிப் போவதை உணர்ந்த தினகரன், உங்களால் முடியவில்லை என்றால், சின்னத்தையாவது முடக்கியே வையுங்கள் எனவும் கூறினார்.
தினகரன் அதிருப்தி
இறுதியில், நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள். இந்தக் கோபம் தினகரனுக்கு அதிகமாகவே இருக்கிறது. எனவேதான், மதுசூதனனை வீழ்த்துவதற்கு விஷால் தரப்பைக் களமிறக்க தூது அனுப்பினார். இதை உணர்ந்த அரசுத் தரப்பினர், விஷாலின் வேட்புனுமவை தள்ளுபடி செய்ய வைத்துவிட்டனர். இனி அடுத்தகட்டமாக, இரட்டை இலைக்கு விழும் வாக்குகளில் பாதியை வாங்கினாலே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார் தினகரன். களநிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறார் என சுட்டிக்காட்டுகின்றனர்.
சசியிடம் புகார்
இதனையடுத்துப் பேசிய சசிகலா குடும்பத்தின் முக்கிய பிரமுகர், தினகரன் வருகைக்குப் பிறகுதான் கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதை சொந்தக்காரர்கள் புரிந்து வைத்துள்ளனர். அவரால் எந்தப் பயனும் இல்லை என்பதை சசிகலாவிடம் நேரடியாகக் கூறிவிட்டனர். ஆர்.கே.நகர் தேர்தல் முடியட்டும் எனக் காத்திருக்கிறார் சசிகலா.
இல்லையேல் திவாகரன்
தேர்தலில் எதிர்பார்த்த வாக்குகள் கிடைத்துவிட்டால், தினகரனின் முக்கியத்துவம் கூடும். இல்லையென்றால், அவருக்கு செக் வைக்கும்விதமாக திவாகரன் களமிறக்கப்படுவார். இதைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார்.