நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் கிடைத்தது... ஆபரேசன் சக்சஸ் - மருத்துவமனை அறிவிப்பு
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் பல்லுறுப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்லுறுப்பு செயலிழப்பு பிரச்சினை இருந்தது. அதிலும் கல்லீரலும், சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உறுப்பு தான மையத்தில் நடராஜனுக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் உள்ள நடராஜனை பார்த்துக் கொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, நடராஜனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை பொருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.