ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலா உறவினர் ராவணனுக்கு அப்பல்லோவில் அனுமதி!
சென்னை: ஜெயலலிதாவினால் 2012ம் ஆண்டு அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட ராவணன் ஆதிக்கம் மீண்டும் அதிமுகவில் தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று ராவணன் வந்து நலம் விசாரித்து சென்றுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், ஜெயலலிதாவின் நலனில் அக்கறையுள்ள பலர் மருத்துவமனை வந்து விசாரித்து செல்கின்றனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை, அவரது தோழி சசிகலா உடனிருந்து கவனித்து வருகிறார். ஜெ. உடல் நலம் குறித்து சசிகலாவின் உறவினர்கள் அவ்வப்போது வந்து விசாரித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் சசிகலாவின் சித்தப்பா மகன் ராவணன் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ராவணன். முறைகேடு புகாரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கு மண்டலம்
தமிழகத்தின் ஒவ்வொரு மண்டலத்தையும் சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களே நான்கு மண்டலங்களாக பிரித்து முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதில் கோவையை மையமாக வைத்து அதிகார மையமாக செயல்பட்டவர் ராவணன். கட்சியில் மட்டுமின்றி மேற்கு மாவட்டங்களில் கலெக்டர், எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் நியமனம் உள்ளிட்ட அனைத்துமே இவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தன.
அதிமுகவில் ராணவன்
கட்சி பதவிகளில் கீழ் மட்டத்தில் வார்டு செயலாளர் நியமனம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை ராவணன் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வந்தனர். 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் ராவணன் ஆசி பெற்றவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளும் கிடைத்தது. எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, ஈரோடு கே.வி.ராமலிங்கம் ஆகியோர் ராவணனின் தீவிர ஆதரவாளர்கள்.
ராவணன் ஆதிக்கம்
2012ம் ஆண்டு சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் பலர் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் ஒருவர் ராவணன். இவர் மீது நிலம் அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்து கடைசியில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். இவருடன் தொடர்பு வைத்திருந்த பலரது பதவிகளும் பறிக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் ராவணன் அதிகாரம் செலுத்தும் அளவிற்கு வளர்ந்து வருவதாக தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் வகையில் இன்று ராவணன் அப்பல்லோவிற்கு வந்து நலம் விசாரித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் மகன் வருகை
தமிழக நிதியமச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் பிரதீப் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தனது மனைவியுடன் வந்தார். மருத்துவமனையில் உள்ள கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஜெ.வின் உடல் நிலை குறித்து விசாரித்து சென்றுள்ளார்.
ஜெ.அண்ணன் மகள்
தீபா முதல்வர் ஜெயலலிதாவின் இரத்த உறவான அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டது. மூன்று நாட்கள் அப்பல்லோ வாசலில் காத்திருந்து விட்டு கண்ணீரோடு வெளியேறினார். ஆனால் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராவணனுக்கு அப்பல்லோ செல்ல அனுமதி கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.