ஆடி வெள்ளிக் கிழமையன்று... மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த சசிகலா!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு செய்தார். கோயிலுக்கு வந்த அவரை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் வரவேற்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றார். தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட சசிகலா இப்போது தேர்தல் வெற்றிக்கு நன்றி கூற ஒவ்வொரு கோவிலாக சென்று வருகிறார்.
இன்று ஆடிப்பூரம், ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சசிகலா வரும் தகவல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
கோவில் தக்கார் தொழிலதிபர் கருமுத்து.கண்ணன், பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். கோவிலுக்கு வந்த சுவடே தெரியாமல் பூஜையை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டார் சசிகலா.
பருவநிலை மாற்றத்தை உண்டாக்கக் கூடிய மாதம் என்றவகையில் ஆடிக்கு சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் முளைக் கொட்டு நிகழ்ச்சிகள் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகின்றன. அதிலும், ஆடி வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு பூஜை செய்யும்போது, ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகமாக இருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி அம்மனுக்கு மரகதவல்லி என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. நவக்கிரங்களில் புதனுக்குரியதாக கூறப்படுகிறார் சுந்தரேஸ்வரர். புதனுக்கான பரிகாரங்களை இக்கோவிலில் உள்ள சிவனுக்கு செய்வது வழக்கமாக இருக்கிறது.
அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆடி வெள்ளியில் அம்மன் வணங்கும்போது, எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் அரசாட்சி தொடரும் என்ற நம்பிக்கை வலம் வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை மீனாட்சி அம்மன் சந்நிதியில் வைத்து வழிபட்டார் சசிகலா. தேர்தலுக்குப் பிறகு அம்மனுக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications