பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தை திறக்கக் கோரிய மனு: சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி

மதுரை பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை மூடுமாறு கடந்த மே மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது.
பி.ஆர்.பி. நிறுவனம் சார்பிலான வழக்கறிஞர் ஹரிஷ்சால்வே வாதாடுகையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். எந்தவித ஆதாரமும் இல்லாமல் குவாரியை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படவில்லை.
தமிழக அரசு தவறாக ஆய்வுகளை நடத்தி உள்ளது. வேண்டுமானால் மத்திய அரசு தலைமையில் ஒரு குழுவை நியமித்து ஆய்வு மேற்கொள்ளலாம். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பி.ஆர்.பி. நிறுவனமும் ஒன்று. எனவே உடனடியாக குவாரிகளை திறக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பிலான வழக்கறிஞர் சுந்தரம் தனது வாதத்தின் போது, பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்கினார்.
அவர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு மதுரை மாநகரை சுற்றியுள்ள 175 கிரானைட் குவாரிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 78 குவாரிகள் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டறியப்பட்டு அவற்றை மூட அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான 22 கிரானைட் குவாரிகளும் அடங்கும். இந்நிறுவனம் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து அங்குள்ள கிரானைட் கற்களை சட்டவிரோதமாக வெட்டி எடுத்துள்ளது.
இதனால் தமிழக அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 23 கோடி இழப்பு ஏற்பட்டது. குவாரி நிர்வாகத்திற்கு எதிராக 87 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 50 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. எனவே முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது, அரசு நிலத்தை ஆக்கிரமித்தது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டதால் குவாரிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், கிரானைட் குவாரிகளை திறக்க அனுமதி தர முடியாது என்று கூறி பி.ஆர்.பி நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications