ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக அரசு, ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. பிப்ரவரி 2ம் தேதி வழக்கு விசாரிக்கப்பட இருந்த நிலையில் பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருதரப்பு கோரிக்கையை ஏற்று நீதிபதி பினாகி சந்திரகோஸ் அமர்வு இவ்வுத்தரவை பிறப்பித்தது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்போது, தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு ஜெயலலிதா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, கடந்த 8ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் விசாரணை நீதிபதி ஆர்.கே.அகர்வால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமித்வா ராய் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் அடங்கிய அமர்வு முன் ஜனவரி 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்தியர்ஜூனா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ் மற்றும் இவ்வழக்கின் முதல் புகார்தாரர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது வாதத்தை முன் வைத்த கர்நாடக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, "ஜெயலலிதா, சசிகலா உள்ளிட் டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும். பிப்ரவரி 2-ம் தேதி முதல் இறுதிவாதத்தை தொடங்க தயாராக இருக்கிறோம். இவ்வழக்கை விரைவாக முடிக்கும் வகையில், நாள்தோறும் விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பினாகி சந்திரகோஷ், ''இவ்வழக்கில் இறுதிவாதம் தொடங்குவதற்கு முன்பாக கர்நாடக அரசு, திமுக தரப்பு, ஜெயலலிதா தரப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது இறுதிவாதத்தின் முக்கிய அம்சங்களை இரு வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும். அதை ஆராய்ந்த பின், வழக்கின் தன்மைக்கேற்ப விசாரணை தொடர்ந்து நடக்கும். வருகிற பிப்ரவரி 2-ம் தேதி விசாரணையை தொடங்கப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விசாரணை நடத்தலாம்'' என்றார்.
சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கு விசாரணை பிப்ரவரி 2ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில், கர்நாடக அரசு தரப்பிலும், ஜெயலலிதா தரப்பிலும் அவகாசம் கேட்டு மனு அளிக்கப்பட்டது. இரு தரப்பு கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஸ் அமர்வு . வழக்கு விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications