நானும், ஸ்டாலினும் ஊழல் செய்தோமா?- வழக்கு போட வேண்டும் என்று காத்திருக்கிறோம்- மா.சு.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 2 ஆண்டுகளாக மேயர் துரைசாமி கடந்த கால மாநகராட்சி நிர்வாகத்தின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதை விரைவில் வெளிப்படுத்தப் போவதாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்த இவர் 28-ந் தேதி நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மேயராக பொறுப்பு வகித்த சமயத்தில் ரூ. 292.31 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் நான் (சுப்பிரமணியன்) அப்பொறுப்பு வகித்த சமயத்தில் ரூ. 125 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், தணிக்கைத் துறை தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மன்ற கூட்டத்தில் அவர் சொன்ன ‘‘நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது'' என்றால் அது என்ன குற்றம்? யார் செய்த குற்றம்? அக்குற்றத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் யார்? யார்? அதனால் மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பு என்ன? இதில் மேயர் பொறுப்பு வகிப்பவர்களுக்கு உள்ள சம்மந்தம் என்ன? என்கின்ற விவரங்களை சைதை துரைசாமி கண்டிப்பாக தெளிவுபடுத்த வேண்டியது அவர் கடமையாகும்.
மேயர் துரைசாமிக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். இது சம்பந்தமாக நீங்கள் விவாதித்து எங்கள் மீது குற்றம் சுமத்த தயாராக இருப்பின் நீங்கள் எங்கே அழைத்தாலும் அங்கே வந்து உங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன். தேதியையும் நேரத்தையும் உடனடியாக அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
மு.க.ஸ்டாலின் மேயராக பொறுப்பேற்றிருந்தபோது 9 மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.94.50 கோடியாகும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஒன்பது மேம்பாலங்களையும் கட்டி முடித்ததற்கு பிறகு ஆன செலவு ரூ.60.78 கோடியாகும். திட்டமிடப்பட்ட தொகையிலிருந்து செலவிடப்பட்ட தொகை போக மாநகராட்சிக்கு மிச்சப்படுத்தப்பட்ட தொகை ரூ.32.72 கோடியகும். இதுவே பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்பதை போல மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.
சென்னையில் உள்ள குப்பைத் தொகுப்பு மையங்கள் அமைத்ததில் முறை கேடுகள் நடந்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் ஆதாரங்களோடு எடுத்துச் சொன்னார். உடனே தளபதியின் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன் என்று மேயர் அறிவித்தார்.
நாங்கள் ஆதாரங்களுடன் காத்திருக்கின்றோம். நீதிமன்றத்தில் சந்திக்க தயார் என்று தளபதி சவால் விட்டு பல மாதங்கள் ஆகியும் கூட இன்னும் வழக்கு தொடுப்பதற்கு நேரமில்லாமல் உள்ளார். அந்த வழக்கோடு சேர்த்து எங்கள் மீது தற்போது சுமத்தியுள்ள இந்த குற்றச் சாட்டுகள் குறித்த வழக்கையும் நீங்கள் உடனடியாக தொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.