என்ன ஜாதி? என்ன மதம்? பள்ளிகளில் இந்த விவரங்களை கேட்கவே கூடாது.. பள்ளிக் கல்வித் துறை வார்னிங்
கோவை: தனியார் பள்ளிகள் சுயவிவர குறிப்பேட்டில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடக் கூடாது என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 9 தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கும் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவர படிவத்தில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடுமாறு கூறியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பெல்ராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதில் மாணவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் ஜாதி, மத அடையாளங்களை இந்த கல்வி ஆண்டு முதல் குறிப்பிடக் கூடாது என அந்த 9 தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டார். மேலும் அந்த பள்ளிகளின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 9 பள்ளிகள் மட்டுமில்லாமல் அனைத்து பள்ளிகளும் இந்த சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக கல்வி மேலாண்மை தகவல் மையம் இணையத்தில் பள்ளிகளில் பதிவு செய்யப்படும் மாணவர்களின் விவரங்களில் ஜாதி, மதம் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில் முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். அது போல் என்ன சாதி என்பதை தெரிந்துக் கொண்டால்தான் கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு உள்ளிட்டவைகளை அளிக்க முடியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சில பள்ளிகளில் சுயவிவரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஜாதி, மத அடையாளங்களை வைத்து மாணவர்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது போல் உயர் ஜாதி மாணவர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு தாழ்ந்த ஜாதியினரிடம் தீண்டாமை கடைப்பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications