இனி திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்!
சென்னை: சென்னையில் உள்ள திரையரங்குகளில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் பள்ளிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இனி திரையரங்குகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு கூடுதல் ஆணையர் ராஜேஷ்தாஸ் தலைமை வகித்தார். இணை ஆணையர் சண்முகவேல், துணை ஆணையர்கள் சரவணன், கிரி, பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சென்னையில் உள்ள திரையரங்குகளின் உரிமையாளர்கள், மேலாளர்கள் என சுமார் 30 பேர் பங்கேற்றனர். இதில், திரையரங்குகளுக்கு வருபவர்களை கண்காணிக்கும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், பார்வையாளர்களை சோதனையிட்ட பிறகே அரங்குக்குள் அனுமதிக்க வேண்டும், திரையரங்குக்கு வரும் வாகனங்களும் சோதனை செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனால் இதுபோன்ற சோதனைகளுக்கு பார்வையாளர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இதனால் திரையரங்கில் பிரச்னை ஏற்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்களும், மேலாளர்களும் தெரிவித்தனர்.
இதைத் தவிர்க்கும்வகையில், 'பாதுகாப்பு சோதனை கட்டாயம்' என திரையரங்கு வளாகத்தில் காவல்துறையின் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை குறித்து மேலிடத்தில் கலந்து பேசி முடிவு எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications