'துண்டுபோட்டு இடம்பிடிக்கும்' வைகோ; 'தீவட்டி அழகிரி' 'தள்ளாட்ட தலைவன்' விஜயகாந்த்: சீமான் 'சூடு'!!
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் விவகாரத்தை அரசியல் அறுவடைக்காக மதிமுக பொதுச்செயலர் வைகோ பயன்படுத்துவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக தாக்கியுள்ளார்.
சென்னையில் இருந்து வெளிவரும் "நியூஸ் சைரன்" வார இதழில் "அடங்கா பெருநெருப்பு" என்ற தலைப்பிலான தொடரில் வைகோ குறித்து சீமான் எழுதியுள்ளதாவது:
அரசியல் அரங்கில் பத்தோடு பதினொன்றாக நிறைந்திருந்தவர்கள் பலரும் நிறம் மாறும் பச்சோந்திகளாக மாறிப்போனதில் அவ்வளவாக ஆச்சர்யமில்லை. ஆனால், நாம் யாரை வாழ்வியல் வடிவமாக வரித்துக் கொண்டோமோ, யாருடைய உரைகளைக் கேட்டு உள்ளத்துக்குள் வைராக்கியம் பெருக்கினோமோ, ஒப்பற்ற தலைவனாக மனதுக்குள் யாரைத் தூக்கிச் சுமந்தோமோ...! அவர்கள் தலைகீழாக மாறி நிற்கும் அவலத்தை நாம் எப்படி சகிக்க முடியும்? கண்ணியக் கடமையாளனாக & திருப்புமுனை நாயகனாக & கடைசி நம்பிக்கையாக நாம் யார் பின்னால் ஓடினோமோ, அந்தத் தலைவன் நிறம் மாறி நிற்கும் கோலத்தை யாருடைய நெஞ்சம்தான் ஏற்கும்?
இன்னும் என்ன பூடகப் புலம்பல்?
புரட்சிப் புயலாக எங்களின் இதயம் உலுக்கிய இனமான அண்ணனே...! உங்களின் பின்னால் ஓடிக் களைத்தவனாக ஒரு சில நிமிடங்கள் நான் உங்களோடு பேச வேண்டும். வை.கோபாலசாமி என்கிற பெயர் எங்களுக்குள் நிகழ்த்திய பிரளயத்தை வேறு எந்தத் தலைவனும் இளைய தலைமுறை இதயங்களுக்குள் நிகழ்த்தியதில்லை. கம்பீரமும் கணீர் குரலுமாய்க் கறுப்புத் துண்டை இழுத்துவிட்டபடி நீங்கள் உரையாற்றுகிற மேடைகளில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த மூர்க்கத்தன ஆதரவாளர்கள் நாங்கள். சட்டைப் பையில் தலைவர் பிரபாகரனின் படமும், உங்களின் படமும்தான் எப்போதும் இருக்கும். இதயத்துக்கு அருகாமையில் உங்கள் இருவரையும் சுமந்து, உள்ளத்து உணர்வு குன்றாமல் பார்த்துக் கொண்டவர்கள் நாங்கள்.
ஈழம் என்கிற வார்த்தையைச் சொல்வதற்கான தைரியமும், தகுதியும் உங்கள் நாவுக்கு மட்டுமே உண்டு என்பது எங்களின் அன்றைய நம்பிக்கை. ஈழப் பயணம் முடித்து நீங்கள் தாய்த் தமிழகத்துக்குத் திரும்பியபோது ‘தலைவனைக் கண்ட தலைவனாக' நாங்கள் உங்களைக் கொண்டாடிக் களித்தோம். ஆனால், உங்களின் ஈழப் பயணமே கட்சிக்குள் எதிர்மறையாகி உங்களைக் கட்சியை விட்டே நீக்குகிற நிலையானபோது, தீக்குளித்து மடிந்த இடிமலை உதயனுக்கு நிகரான பரிதவிப்பில் உங்களின் கால்களைச் சுற்றிக் கிடந்தவர்கள் நாங்கள்.
அப்பா மணிவண்ணன் ‘அமைதிப்படை' படம் எடுக்கும்போது அதன் முக்கிய பாத்திரத்துக்கு கோபால்சாமி எனப் பெயர் சூட்டி எங்களின் சகோதரன் செல்வபாரதியை அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்தப் பெயரை நீக்கச் சொல்லி எங்களுக்கு நெருக்கடி. ‘படத்தில் இருந்துதானே அந்தப் பெயரை நீக்க முடியும்? இதயம் முழுக்க எழுதி வைத்திருக்கிறோமே...! அதை என்ன செய்வீர்கள்?' எனக் கேட்டுத்தான் அந்தப் பெயரை நீக்கினோம். தனித்துக் கிளம்பிய உங்களின் பின்னால் பசித்துக் கிளம்பினோம். நாங்கள் மட்டுமல்ல... அ.தி.மு.க&வுக்கும், தி.மு.க-வுக்கும் மாற்று தேடிய மனங்கள் யாவுமே உங்களின் பின்னால்தான் அணிவகுத்தன.