அன்று அழகிரி தீவட்டிக் கொள்ளைக்காரன், கொலைகாரன் இன்று.. நேரில் போய் ஆதரவு கேட்பதா
கூட்டணிக் கொடுமைகளைக்கூட சகித்துக்கொண்ட உங்களின் பற்றாளர்கள் சமீபத்தில் பதறிப்போனது ஏன் தெரியுமா அண்ணா? தமிழகத்தின் அறிவார்ந்த பெருமகன் ஒருவரை சமீபத்தில் நீங்கள் வீடு தேடிப்போய் சந்தித்தீர்களே...! மக்கள் செல்வாக்கு கொண்ட அந்த மகத்துவ தலைவனிடம் ஆதரவு கேட்டு நின்றீர்களே...!
நீங்கள் தேடிப்போய் சந்திக்கிற அளவுக்கு அழகிரி என்ன அவ்வளவு பெரிய ஆளா அண்ணா? இனத்துக்காக எரிந்து தம்பி முத்துக்குமார் கரிக்கட்டையாகக் கிடக்க, நீங்களும் நானும் ஆறுதலற்று அழுது கதறிக் கொண்டிருக்கையில் பிரியாணி போட்டு பிறந்த நாள் கொண்டாடிய பெருந்தகையாளர் அல்லவா அந்த அழகிரி?
2008 மாநாட்டில் தீவட்டிக் கொள்ளைக்காரன் என்றும், கொலைகாரன் என்றும், இவனுக்கா பட்டுக்கோட்டை அழகிரியின் பெயர் என்றும் கொந்தளித்தீர்களே...! அவருக்குத்தான் பழைய பாடல்களைப் பரிசளித்தீர்களா?
‘உங்கள் நாக்கை மியூசியத்தில் வைக்கலாம்' என இணையதளங்கள் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லையே அண்ணா? ‘நானா அவரைக் கூப்பிட்டேன். அவரா வந்தார். ஆதரவு கேட்டார். நான் அதரவு கொடுக்குறேன்னு சொல்லலையே...' என அழகிரி உங்கள் சந்திப்பைக்கூட உப்புச்சப்பற்ற நிகழ்வாகச் சித்தரித்துச் சிரித்தபோது எனக்கு வந்த ஆத்திரமும், கோபமும் உங்களுக்கும் வந்ததா அண்ணா?